அல்லாஹ்வின் சார்பாக கையெழுத்து போடுபவர்கள் | நிகாப் வாஜிபா?! ஹராமா?!

நிகாப்
By – Affan Abdul Haleem

இது பெண்கள் அரபுக் கல்லூரியொன்றில் உரை நிகழ்த்த சென்றிருந்த போது கேட்கப்பட்ட கேள்வி.

இதற்கான பதில் பெண்களின் அவ்ரத் எது என்பதற்கான பதிலாகும். முகம் மற்றும் மணிக்கட்டு தவிர்ந்த மற்ற அனைத்துப் பகுதியும் அவ்ரத் என்பதில் எவ்விதமான கருத்து வேறுபாடும் கிடையாது.

அனைவரும் ஏற்றுக்கொண்ட மிகப் பெரிய உண்மை அது. முகத்தையும் கையையும் மூட வேண்டுமா? அவையும் அவ்ரத்தா என்பதில் தான் கருத்து வேறுபாடு இருக்கின்றது. இந்தக் கருத்து முறன்பாடு இன்று நேற்றல்ல கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக இருக்கின்ற ஒன்றாகும்.

*கருத்து முறன்பாடு உள்ள விடயம் ஒன்றில் ஒரு கருத்தை வாஜிப் என்று கூறுவதானது ஏனைய கருத்துக்களை ஹராம் என்று சொல்வதற்குச் சமனாகும்*.

ஒருவர் இப்படிச் கூறலாம். கருத்து வேறுபாடுள்ள இந்த விடயத்தில் நான் இந்தக் கருத்தைத் தான் மிகப் பலமானதாகக் எண்ணுகின்றேன். என்னைப் பொருத்த மட்டில் அதனை வாஜிப் என்ற தரத்தில் வைத்தே பார்க்கின்றேன் என்று கூறினால் அது வேறு கதை.

ஆனால் இது தான் வாஜிபானது இதுவே இறுதியான முடிவு என்று கூறினால் அது மிகவும் பாரதூரமான வார்த்தையாகும்.

இமாம் ஷாபிஈ அவர்கள் கூறியது போல் *’எனது கருத்து சரியானது, எனினும் பிழையாக இருக்க வாய்ப்புண்டு, மற்றவர்களின் கருத்து பிழையானது ஆனால் சரியாக இருக்க வாய்ப்புண்டு’*

என்று கூறுவது அறிவு பூர்வமானது, நாகரிகமானது, பண்பாடானது. ஆனால் தான் சரி என்று நினைக்கும் கருத்தை வாஜிபாக்கும் அதிகாரம் உலகில் எந்தப் பெரிய அல்லாமாவுக்கும் கிடையாது.

*கருத்து வேறுபாடுகளுள்ள ஒரு விடயத்தில் ஒருவருக்கு தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக சொல்ல முடியுமான அதி உச்சபட்ச எல்லை இதுதான். ஷாபிஈ மத்ஹபிலிருந்து ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய முதல் பாடமது.*

கருத்து வேறுபாடுள்ள ஒரு விடயத்தில் எந்த ஒரு கருத்துக்கும் ‘பல கருத்தில் ஒரு கருத்து’ என்பதை விடக் கூடிய நிலையை வழங்கப்பட முடியாது. ஒரு கருத்துக்கு புனிதத்துவத்தை கொடுக்க முடியாது.

மாற்றுக் கருத்துடையவர்களை மட்டரகமாக விமர்சிக்க முடியாது. *‘’இந்தக் கப்ருக்கான சொந்தக் காரரைத் தவிர எம்ங்கள் யாருடைய கருத்தும் ஏற்றுக் கொள்ளப்படவும் கூடும், மறுக்கப்படவும் கூடும்’’* என்று நபியவர்களின் அடக்கஸ்தலத்தை சுட்டிக் காட்டி இமாம் மாலிக் அவர்கள் சொன்ன கருத்தை நாமனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இமாம் அபூ ஹனீஃபாவிடம் ஒரு தடவை ”இமாமவர்களே உங்களுடைய இந்தக் கருத்துத்தான் எந்தவித அசத்தியமும் கலந்திடாத தெளிவான சத்தியமா?” என்று கேட்கப்பட்ட போது இமாமவர்கள் *”சிலநேரம் அது எந்தவித சத்தியமும் கலந்திடாத தெளிவான அசத்தியமாகக் கூட இருக்கலாம்’’* என்று கூறினார்கள்.

இது அறிவின் நிறை நிறைந்த பண்பினால் பூமியை நோக்கி தாழ்ந்து இருந்த எமது பாரம்பரியத்தின் ஓர் அடையாளமாகும்.

பெண்களின் அவ்ரத்தைப் பொருத்த வரையில் முகம் மற்றும் மணிக்கட்டு வறையிலான கை தவிர்நதைு அனைத்தும் அவ்ரத் என்பதில் சமூகம் ஒன்றுபட்டிருக்கின்றது. எந்த இயக்கமும், எந்த மத்ஹபும்,  எந்தக் குழுவும் இதில் முரண்படவில்லை.

ஆண்களது அவ்ரத் எது? என்று கேட்டால் தொப்புளிலிருந்து முழங்கால் வரை என்று அனைவரும் இலேசாக சொல்லி விடுவார்கள். ஒரு திரீக்வாட்டர் அல்லது ஒரு சிறிய டவல், துணி ஆணின் அவ்ரத்தை மறைத்துக் கொள்வதற்கு போதுமானது. எனினும் பொதுவாக எல்லா ஆண்களும் தமது அவ்ரத்தை விட கூடுதலான பகுதிகளை மறைத்துக் கொண்டே செல்கின்றனர்.

அதே போல் ஒரு பெண் தனிப்பட்ட முறையில் தனது அவ்ரத்தை விட அதிகமான பகுதிகளை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஏதேனும் சில காரணங்களுக்காக விரும்பினால் அவ்வாறு செய்துகொள்ள அப் பெண்னுக்கு பூரண சுதந்திரம் இருக்கின்றது.

ஆனால் பிரச்சினை எங்கு ஆரம்பிக்கும் என்றால் அப்படியான அந்த தனிப்பட்ட சுதந்திரத்தை வாஜிப் கட்டாயம் என்ற நிலைக்குக் கொண்டு வருகின்ற போதுதான்.

வாஜிப் என்பது கட்டாயக் கடமை, ஒறு விடயம் வாஜிபாக இருக்கும் போது அதனோடு சம்பந்தப்பட்ட கருத்து முறன்பாடுள்ள ஏனைய விடயங்கள், கருத்துக்கள் ஹராம் என்ற தரத்துக்கு சென்று விடுகின்றன.

வாஜிபான ஒன்றை விடுவது பெரும் பாவமாகும், வாஜிபைப் புறக்கணிப்பதும் நரகத்துக்கு கொண்டு செல்லக் கூடியதாகும். வாஜிப் என்ற ஒரு பத்வா இந்தளவு விளக்கத்தை உள்ளடக்கி இருக்கின்றது.

அடுத்த முக்கியமான வினா தான் வாஜிப் என்பதற்குரிய கத்யிய்யத்தான ஆதாரம் எங்கே என்பதாகும். லன்னிய்யாத்துகளை வைத்து எவரையும் சுவர்கத்திற்கோ நரகத்திற்கோ அனுப்ப முடியாது.

இன்று பெண்களுடைய முகத்துக்கு வந்திருக்கும் இந்தச் சோதனை சில காலங்களுக்கு முன்னர் ஆண்களுடை தலைக்கு வந்திருந்தது. தலைப்பாகை பற்றிய வாதப் பிரதிவாதங்களே அது. லுங்கியை கழட்டியாவது தலைப்பாகை அணிவித்து விட்டுத் தான் அடுத்த வேலை பார்ப்பார்கள் என்பது போலிருந்தது அன்றைய தீவிரம்.

இன்றைய தீவிரம் எந்நளவு போயிருக்கின்றது என்றால்

சமூகத்தில் அடிப்படையான அவ்ரத்தைப் பற்றி எந்தவித சிந்தனையும் இல்லாமல் இருக்கின்ற பெரும்பாலானோறைப் பற்றிய கரிசனையே இல்லாமல், முகம் திறந்து பார்வையைத் தாழ்த்திக் கொண்டு செல்கின்றவர்களின் முகங்களுக்கு ஒரு கதவு போட்டிட வேண்டுமன்ற அளவுக்குப் போயிருக்கின்றது.

இந்தத் தீவிரப் போக்கு அனைத்துப் பெண்களையும் நிகாப்தாரிகளாக்கி விடும் என்று அவர்கள் நினைத்தால் அது பெரும் முட்டாள்தனம். ஏனெனில் தீவிர போக்குகள் எப்போதும் மனிதர்களை மார்க்கத்தை விட்டு தூரப்படுத்துகின்ற வேலையையே செய்து வந்திருக்கின்றன.

மூடியாக வேண்டும் என்பதில் ஒரு கூட்டம் எல்லை மீறி செல்லும் போது அதன் விளைவாக திறந்திருப்பதில் இன்னுமொரு கூட்டம் எல்லை மீறும்.

கருத்து முறன்பாடுள்ள ஒன்றில், ஒரு கூட்டம் ஒரு கருத்தை வாஜிபாக்கும் போது இன்னொரு கூட்டம் அதனை ஹராமாக்கும்.

எப்படி கீரைக் கடைக்கும் எதிர்க் கடை உண்டோ அதே போன்று பத்வாக் கடைக்கும் எதிர்க் கடை வந்து விடும். நீ வாஜிபென்று சொன்னால் நான் ஹராம் என்று சொல்வேன், நீ ஹராம் என்றால் நான் வாஜிப் என்பேன் என்று மல்லுக்கு நிற்பார்கள்.

நிகாப் வாஜிபென்று வெளியிடப்பட்ட ஃபத்வா மிகவும் பாரதூரமானது.

நோன்பு பத்வாவும், பெருநாள் பத்வாவும் மங்கிப் போனது போல் இது மங்கிப் போகாது. ஏனென்றால் மக்கள் தினமும் நோன்பு பிடித்து பெருநாள் கொண்டாடுவதில்லை, ஆனால் பெண்கள் தினமும் ஹிஜாப் அணிகிறார்கள்.

நீங்கள் உங்களுடைய மார்க்கத்தில் எல்லை மீறி சென்று விடாதீர்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான். தப்ரீத் மற்றும் இப்ராத் என்ற இரண்டு தீவிரப் போக்குகளுக்கு நடுவில் அகப்பட்டுக் கொண்டு உம்மத் இன்று அல்லாடிக் கொண்டிருக்கின்றது.

அந்தத் தீவிர போக்கிலிருந்து சமூகத்தைக் காப்பாற்றி நடுநிலையின் பக்கம் கொண்டு வர வேண்டிய ஆலிம்கள் ஒரு பக்கத் தீவிரத்துக்கு இன்னும் எண்ணை ஊற்றுகின்ற வேலையைச் செய்து விடக் கூடாது. அது சமுதாய வரலாற்றில் மிகப் பெரும் அநீதியாக இருந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.

இருதியாக இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்களுடைய ஒரு கருத்தை கூறி முடித்துக் கொள்கின்றேன்.

ஒரு முப்தி (பத்வாவை வழங்குபவர்) ஒரு பத்வாவை முன்வைக்கிறார் எனில் அவர் அல்லாஹ்வின் சார்பில் கையெழுத்துப் போடுகின்றார் என்பதே அர்த்தமாகும். தனது மிகப் பிரசித்திப் பெற்ற புத்தகமான இலாமுல் முவக்கியீன் அன் ரப்பில் ஆலமீனில் இமாம் அவர்கள் கேட்கின்றார்கள்.

சாதாரணமாக அரசர்களின் சார்பாக கையெழுத்து இடும் பதவிகளில் உள்ளவர்களே எவ்வளவு தூரம் உயர்ந்த பொறுப்பு உள்ளவர்களாகக் கருதப்படுகின்றார்கள் என்றால் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியாளன்  அல்லாஹ்வின் சார்பாக கையெழுத்துப் போடும் பதவிகளில் உள்ளவர்கள் எந்தளவு தூரம் பொறுப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும்?

எவ்வளவு பயங்கரமான கேள்வி?!

அப்வான் அப்துல் ஹலீம்

 

Sarinigar Telegraph தளத்தை Subscribe பண்ணவும் . மேலும் எங்களது Facebook மற்றும் WhatsApp பக்கங்களை லைக் செய்யவும். உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடவும். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி!

Leave a Reply