உங்கள் ஊர் மஸ்ஜிதின் இமாம் பேசுகிறேன்…

இமாம்
 உங்கள் ஊர் மஸ்ஜிதின் இமாம் பேசுகிறேன்… உங்களுக்கு என்னை ஞாபகமிருக்கிறதா..?

அன்றொரு நாள் மஸ்ஜிதில் தொழுகை முடிந்தவுடன் “ஹஸ்ரத்.. எனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. ஒரு சாலிஹான குழந்தை பிறக்க நீங்கள் துஆ செய்யுங்கள்” என்று கூறினீர்களே..! உங்கள் குழந்தைக்காக துஆ செய்த இந்த இமாமை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?

உங்கள் குழந்தை பிறந்தவுடன் “ஹஸ்ரத்.. என் மனைவிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. எனது குழந்தைக்கு அழகான பெயர் வைக்க வேண்டும் . என்று என்னை கூட்டிச் சென்று உங்கள் பிள்ளைக்கு பெயர் சூட்டி அழகு பார்த்தீர்கள்..!

நான் வைத்த பெயரைச் சொல்லி உங்கள் குழந்தையை நாள்தோறும் அழைக்கும் உங்களுக்கு அந்த பெயர் சூட்டிய இந்த ஹஸ்ரதை மறந்திருப்பது நியாயமில்லை..!

“ஹஸ்ரத்… நான் ஒரு புது வியாபாரம் தொடங்கயிருக்கிறேன்.. என் வியாபாரத்திற்கு அல்லாஹ் பரக்கத்தை கொடுக்க துஆ செய்யுங்களேன்” என்று என்னை உங்கள் வியாபார நிலயைத்திற்கு அழைத்துச் சென்று கல்லாவில் உட்காரவைத்து அல்லாஹ்விடம் துஆ செய்ய சொன்னீர்களே..! உங்கள் வியாபாரத்தின் பரக்கத்திற்காக துஆ செய்த இந்த இமாம் உங்களுக்கு நினைவிருக்கிறதா..?

“ஹஸ்ரத்.. வியாபாரத்தில நல்ல இலாபம்.. புது வீடு ஒன்றும் கட்டி இருக்கிறேன் நாங்கள் குடியேற முன்பு நீங்கள் தான் வந்து துஆ செய்ய வேண்டும்..” என்று என்னை அழைத்துச் சென்று உங்கள் ஆடம்பர புது வீட்டிற்காக துஆச் செய்ய வைத்தீர்கள் தானே..! இப்படியே புது வீடு வாசல், புது வாகனம், புதுக்குடித்தனம் என்று அனைத்து விடயங்களின் பரக்கத்திற்காக உங்களுக்கு துஆ செய்த இந்த ஹஸ்ரதை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா..?

“ஹஸரத்.. என் மகனின் நிகாஹ்வை நல்ல முறையில் நடாத்தி வைத்து புது தம்பதியினருக்கு துஆ செய்ய நீங்கள் தான் வர வேண்டும்”. என்று என்னை மரியாதையுடன் மேடையில் அமர வைத்து அழகு பார்த்தீர்களே..! என்னை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?

அடுத்து இதோ .. உங்கள் மகனின் முறை..

“ஹஸ்ரத் எங்கள் வாப்பா மௌத்தாகிவிட்டார்கள். நீங்கள் தான் ஜனாஸா தொழுகையை நடாத்தி, அடக்கம் செய்து துஆ செய்ய வேண்டும்” என கவலையும் கண்ணீருமாக உங்களின் அடுத்த தலைமுறை என்னை தொடர்பு கொள்கின்றது..

இப்படி உங்கள் ஊரின் ஒவ்வொரு குடும்பத்தினருடைய இன்பத்திலும் துன்பத்திலும், உங்களின் சுக வாழ்விற்காகவும், வாழ்கையின் அனைத்து நிகழ்வுகளின் பரக்கத்திற்காகவும் துஆ செய்த என்னை அவ்வளவு சீக்கிரம் நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை…

ஊரில் பணம் படைத்தவர்கள் பலர் இருந்தாலும், மாதந்தோறும் மஸ்ஜிதின் வருமானம் பல லட்சமாக இருந்தாலும். எனது சம்பளத்தை மட்டும் முப்பது, நாற்பதாயிரத்தை தாண்டி கொடுக்க உங்களுக்கு மனம் வந்ததில்லை .

வானுயர்ந்த அழகிய மினாராக்கள், குளு குளு வென குளிரூட்டும் வசதியுடன் இரண்டடு மாடி மஸ்ஜிதாக இருந்தாலும், எங்களுக்கு அமைவதெல்லாம் படிக்கட்டின் கீழ் வசதி குறைந்த சிறிய ஒரு அறை.

என் மதிப்பிற்குரிய மஹல்லா வாசிகளே..

உங்கள் வாழ்விகையின் ஒவ்வொரு சந்தர்பத்திலும் உங்களின் நல் வாழ்விற்காக துஆ செய்த இந்த இமாம் கஷ்டத்துடன் நிலை தடுமாறி நிற்கும்போது கைதூக்கி விட உங்களுக்கு ஏன் மனம் வரவில்லை?

எமது வாழ்க்கை கண்களை போல…!

ஆம்… கையில அடிபட்டால் கண் அழும். காலில அடிபட்டால் கண் அழும். தலையில அடிபட்டால் கண் அழும். உடம்பில் எந்தப் பகுதியில் அடி பட்டாலும் கண் உடனே கவலையுடன் கண்ணீரை சிந்தும். ஆனால் அந்தக் கண்ணுக்கே அடிபட்டால் எந்த உறுப்புகளும் அதற்கான கண்ணீர் சிந்துவதில்லை.

அதே போல் ஊரில் உள்ள ஒவ்வொருத்தரினது கஷ்டத்திற்காக ஒவ்வொரு பொழுதும் கண்ணீர் சிந்தி துஆ கேட்ட இந்த இமாம் கஷ்டப்படும் போது அவரின் கண்ணீரை துடைக்க ஊரில் இருக்கும் உங்கள் ஒருவருக்கும் மனம் வரவில்லை.

ஒன்றை விளங்கிக் கொள்ளுங்கள்.. இந்த இமாம்களுக்கு கஷ்டமில்லாத வேலை என்று நீங்கள் நினைப்பது போல் எங்களின் வேலை அவ்வளவு இலகுவானது அல்ல.

உங்களுக்கு தெரியுமா எங்களின் வாழ்க்கையின் தியாகம் என்னவென்று ..?

அன்று.. எனது வீட்டில் என் குழந்தைக்கு கடுமையான சுகயீனம் வந்து மருத்துவமனையில் சேர்த்து இருந்தேன். அதே தினம் உங்கள் வீட்டில் கல்யாணம். திருமண மண்டபத்தில் நீங்களும் வந்திருப்பவர்களும் கல்யாண வீட்டு சந்தோஷத்தில் மூழ்கி இருக்கும் வேளை.

என் குழந்தையின் நிலை குறித்து மனதிற்குள் நான் அழுது கொண்டிருந்தாலும், மனக் கவலையுடன் அந்த சபையில் உங்கள் முன் சிரித்துக் கொண்டிருந்தேனே! அந்த வலியை, வேதனையை உங்களால் உணர முடியாது.

இன்னொன்றையும் கூறுகின்றேன் கேளுங்கள்…

அன்று எங்களது வீட்டில் ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு.. வீட்டாருடன் சந்தோஷமாக இருக்கும் போது திடீரென இன்னார் இறந்துவிட்டார் என மஸ்ஜிதிலிருந்து அழைப்பு வருகிறது.

மையத்து வீட்டிற்குச் சென்ற நான் என் வீட்டு சந்தோஷத்தை மனதினுள் புதைத்து விட்டு கவலையும் கண்ணீருமாக நின்ற அந்த குடும்பத்தின் துக்கத்தில் நானும் சோகத்துடன் பங்கு கொண்டேனே. அந்த உணர்வின் வலி என்னவென்று உங்களால் உணர முடியுமா?

நீங்கள் சிரிக்கும் போது நாங்களும் சிரிக்க வேண்டும். நீங்கள் அழும் போது நாங்களும் அழ வேண்டும். இதுதான் உங்கள் ஊர் ஹஸ்ரத் ஆகிய எங்களின் வேதனை மிகுந்த வாழ்க்கை. அதற்கு உங்களால், யாராலும் எந்த விலையையும் கொடுத்து விட முடியாது.

எனதருமை முஸ்லிம் சமூகமே… இமாம்களின் கண்ணிம் , அவர்களின் தியாகங்களை புரிந்து கொள்ள முடியாத நிர்வாகிகளை மஸ்ஜிதின் பொறுப்புதாரிகளாக நீங்கள் தெரிவு செய்து வைத்திருக்கும் வரை அவர்களால் என்நாளும் நாங்கள் ஒரு சாதாரண ஊழியரை போல், அவர்களின் வேலையாட்களைப் போல்தான் மதிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம். என்பதை சற்று புரிந்து கொள்ளுங்கள்.

உங்களின் அலுவலக வேலையாள் பத்து நிமிடங்கள் தாமதமாக வந்து கூட தனது பணியை செய்து கொள்ளலாம். ஆனால் தொழுகைக்கான எங்களின் நேரத்தில் ஒரு நிமிடம் கூட நாங்கள் தாமதமாக வந்து தொழுகைக்காக நிற்கமுடியாது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா..?

எந்த ஊழியரும் எந்த பணியாளனும் நல்ல நாள் பொழுதுகளில் உங்களோடு இருக்க மாட்டார்கள். பெருநாளில் அவர்கள் அவர்களது குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பார்கள்.

ஆனால் எங்களை போன்ற ஹஸ்ரத்திற்கு, அவர்களின் குடும்பத்தின் உண்மையான பெருநாள் என்பது பெரு நாளின் மறுநாள் தான்.

எங்களின் குடும்பங்கள் ஊரிலிருக்க இங்கே உங்களுக்காக நாம் பெருநாள் தொழுகை நடாத்தி வைத்துவிட்டு அன்றைய இரவு புறப்பட்டு சென்று மறுநாள் பொழுது விடியும் போது எமது ஊருக்கு சென்று இறங்கினால் அங்கு என் குழந்தைகளும், குடும்பமும் எனது வரவை பார்த்து சந்தோஷப்படுமே அதுதான் எங்களுக்கான, எமது குடும்பத்திற்கான உண்மையான பெருநாள்.

எனவே வேலையாட்களின் பார்வையை எங்கள் மீது செலுத்த வேண்டாம். அவர்கள் வேறு எங்களின் தியாகம் வேறு.

என் முஸ்லிம் சமூகமே! இறுதியாக உங்களுக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன்…

உலக வாழ்க்கைக்கு இன்றியமையாத முக்கியமான சிலதை அல்லாஹ் எமக்கு இலவசமாக தந்திருப்பதால் அதன் அருமை எமக்கு புரிவதில்லை. நீரும், காற்றும் நமக்கு சிரமமின்றி கிடைப்பதால் அவைகளின் அருமை நமக்கு புரிவதில்லை.

அதுபோல் தான் உங்களது இம்மை மறுமை வாழ்க்கையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ள இமாம்களின்  முக்கியத்துவத்தையும் உங்களால் இப்போது உணர முடிவதில்லை.

இமாம்களை இழிவாக பார்க்கும் உங்களது மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.. அவர்களுகான கண்ணியத்தையும் ஊதியத்தையும் நிறைவாக கொடுத்துவிடுங்கள்.

Leave a Reply