சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக 205 இந்தியர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா | US military plane C-17 carrying 205 deported Indians

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அந்த நாட்டு அரசு நேற்று ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியது. இந்த விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது.

அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த சுமார் 8 லட்சம் பேர் அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக 15 லட்சம் வெளிநாட்டினர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 18,000 பேர் உள்ளனர்.

இந்த சூழலில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அந்த நாட்டு அரசு நேற்று ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது. விமானத்தில் வந்த 205 பேரும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதுகுறித்து பஞ்சாப் காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: மத்திய வெளியுறவுத் துறை, மத்திய உள்துறை அதிகாரிகளுடன் அமெரிக்க அரசு அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 205 பேரில் பெரும்பாலானோர் பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்தவர்கள் ஆவர். இதன்காரணமாகவே அமிர்தசரஸில் விமானம் தரையிறங்கியது. விமானத்தில் வந்த அனைவரும் ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.

பஞ்சாபில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 20 பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களில் அவர்கள் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக மத்திய உள்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுடன் பஞ்சாப் காவல் துறை அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். இவ்வாறு பஞ்சாப் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டெல்லியில் செயல்படும் அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரி கூறும்போது, “அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 205 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இது அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற யாரும் முயற்சி செய்ய வேண்டாம்” என்று தெரிவித்தார்.

அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அமெரிக்காவின் டெக்சாஸ், கலிபோர்னியா, சான்டியாகோ உள்ளிட்ட 12 மாகாணங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த மாகாணங்களில் நாள்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 25,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு, பின்னர் அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மெக்ஸிகோ மற்றும் தென்அமெரிக்க நாடுகளுக்கு இதுவரை 5,000 பேர் ராணுவ சிறப்பு விமானங்களில் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். முதல்கட்டமாக இந்தியாவை சேர்ந்த 205 பேரை அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி உள்ளோம். எந்த நாடும் ஏற்காத சட்டவிரோத குடியேறிகளை எல் சல்வடார் நாட்டில் உள்ள சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவுக்கும் எல் சல்வடார் நாட்டுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இவ்வாறு அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!