ஸ்ரீவில்லிபுத்தூர்: தென்காசி, ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்வதற்கு 4 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் மதுரை – கொல்லம் நான்கு வழிச் சாலையில் நத்தம்பட்டியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருவது வாகன ஓட்டுநர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு – கேரளாவை இணைக்கும் பிரதானச் சாலை வழித்தடமான 206 கி.மீ. தூரமுள்ள மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை (என்.ஹெச்.208) ‘பாரத்மாலா பரியோஜனா’ திட்டத்தின் கீழ் நான்கு வழிச் சாலையாக (என்.ஹெச் 744) விரிவாக்கம் செய்ய 2021-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இதில் முதற்கட்டமாக மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் வடுகபட்டி வரையிலான36கி.மீ. தூரத்துக்கு ரூ.541 கோடியும்,வடுகபட்டி முதல் ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் வரை 36 கி.மீ. தூரத்துக்கு ரூ.723 கோடி என ரூ.1,264 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் எம்.சுப்புலாபுரம் முதல் கிருஷ்ணன்கோவில் வரை தற்போது உள்ள சாலையே நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருமங்கலம் – ஸ்ரீவில்லிபுத்தூர் இடையே நத்தம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கெனவே தென்காசி, ராஜபாளையத்தில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி செல்வதற்கு 4 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருவது வாகன ஓட்டுநர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்பாக வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.
இதுகுறித்து வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்வதற்கு 4 சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்ல வேண்டி உள்ளது. இதில் கப்பலூர் சுங்கச்சாவடியில் கார்களுக்கு ஒரே நாளில் சென்று திரும்பி வர ரூ.155, மதுரை ரிங் ரோட்டில் வேலம்மாள் கல்லூரி, சிந்தாமணி, விரகனூர் ஆகிய 3 சுங்கச்சாவடிகளிலும் ஒரே நாளில் சென்று திரும்பி வருவதற்கு ரூ.80 சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கொல்லம், தென்காசி, ராஜபாளையம் செல்வோர் கப்பலூர் சுங்கச்சாவடி உள்ள தேசிய நெடுஞ்சாலையில் (என்.ஹெச் 44) 5 கி.மீ. தூரம் மட்டுமே பயன்படுத்தும் நிலையில், சுங்கக் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை போராட்டம் நடத்தியும், எந்த நடவடிக்கையும் இல்லை.
கனரக வாகனங்கள் ஏற்றிச் செல்லும் சரக்கின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 60 கிலோ மீட்டருக்கு இடையில் சுங்கச் சாவடி அமைக்கக் கூடாது என விதி உள்ள நிலையில் அடுத்தடுத்து உள்ள சுங்கச்சாவடிகளால் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் – திருமங்கலம் இடையே நத்தம்பட்டியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வாடகை கார் மற்றும் சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் உயரும், என்றனர்.
இதுகுறித்து மதுரை – கொல்லம் நான்கு வழிச் சாலை திட்ட இயக்குநர் வேல்ராஜ் கூறுகையில்: கப்பலூர் சுங்கச்சாவடி தேசிய நெடுஞ்சாலை 44-ல் உள்ளது. நத்தம்பட்டி டோல்கேட் தேசிய நெடுஞ்சாலை 744-ல் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரே சாலையில் 60 கிலோ மீட்டருக்குள் சுங்கச்சாவடி இருக்கக் கூடாது என்பதுதான் விதி. கப்பலூர் சுங்கச்சாவடிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இந்தச் சாலையில் அடுத்த சுங்கச்சாவடி கேரள எல்லையான புளியரை அருகே அமைய உள்ளது, என்றார்.