சிறு குழந்தைகள் மிகவும் குறும்புத்தனமானவர்கள், சுட்டித்தனமானவர்கள். அவர்கள் இருக்கும் இடங்களில் எப்போதும் அலுப்போ தனிமையோ இருக்காது. வேறு என்ன வைன் பன்னிவிட்ட பொம்மை போல் தொடர்ந்து விளையாடுவதும், குறும்புத்தனம் பண்னுவதும் தான் அவர்களின் வேலை..
எனினும் இதை பார்த்துக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு என்றால் வேடிக்கையாகவும், குதூகலமாகவும் இருப்பினும் சிறு குழந்தைகளின் சில குறும்புத்தனங்களை அவர்களின் பெற்றோர்களுக்கு பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
அந்த பழக்கங்கள், குறும்புத்தனங்கள் அவர்களை அசௌகரியமாக ஆக்குவதுடன் கோபத்தையும் கூட உண்டாக்கும். ஏனென்றால் பார்ப்பவர்களுக்கு புதிதாக இருந்தாலும் அந்த சேட்டைகள் பெற்றோர்கள் அடிக்கடி பார்க்கும் ஒன்று.
எனவே, சிறு குழந்தைகளை உடைய பெற்றோர்கள் தொடர்ந்து முகம் கொடுக்கும், அவர்களுக்கு சலிப்பை உண்டாக்கும் சிறு குழந்தைகளின் குறும்புகளைத்தான் இங்கு நாம் பார்க்கப் போகின்றோம்.
அந்த சில குறும்புத்தனங்கள் கெட்ட பழக்கங்களைப் போல் இருந்தாலும் சிறு குழந்தைகள் செய்யும் பல செயல்கள் அந்த அந்த வயதிற்கு மிகவும் சாதாரணமாக இருக்கும். அப்படியானால், குழந்தைகள் ஏன் அப்படிச் செய்கிறார்கள், பெற்றோராகிய நாம் அந்த நேரத்தில் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
1. ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பது
சிறு குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒன்று தான் இது. ஒரே கேள்வியை எத்தனை முறை கேட்டாலும் குழந்தைகள் திருப்தி அடையாத நேரங்கள் ஏறாளம். ஒரே பதிலைச் சொல்லி சொல்லி அலுத்துப் போய் அம்மா அமைதியாக இருந்தால் நிலைமை இன்னும் மோசமாக மாறிவிடும்.
இப்படி கேள்வி கேட்பது நமக்குத் தொல்லையாக இருந்தாலும், குழந்தைகள் அதிலிருந்து மகிழ்சியையும், படிப்பறிவையும் பெற்றுக் கொள்கின்றனர்.
வார்த்தைகள் வெவ்வேறு இடங்களில் எவ்வாறு உச்சரிக்கப்படுகின்றன, அந்தந்த கேள்விகளைக் கேட்கும் வெவ்வேறான விதங்கள் போன்றவற்றை சிறிய குழந்தைகள் நினைவில் வைத்துக் கொள்ள முயற்சிப்பதுடன் சிறு குழந்தைகளுக்கு தங்கள் வாயால் விளையாடும் ஒரு விளையாட்டும் கூட.
எனவே சற்று கோபம் வந்தாலும் இந்த நேரங்களில் பொறுமையாக பதில் சொல்ல வேண்டும். குழந்தைகளின் பேச்சுத் திறனையும் அறிவையும் மேம்படுத்த இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்பதை பெற்றோர் நினைவில் வைத்து பதிலளிக்க வேண்டும்.
2. ஒரு இடத்தில் இருக்க இயலாமை
சிறு குழந்தைகள் ஒரே இடத்தில் ஒரு நிமிடம் கூட இருக்க விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு அது எப்படியாகினும் பார்த்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு தலைவலி தான். குறிப்பாக அந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கு. ஏனென்றால் அந்தச் செயல்கள் அனைத்தையும் அவர்கள் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த சுட்டித்தனம் குழந்தைகளுக்கு நல்ல மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்க இது ஆரம்பத்தில் இருந்தே உதவுகின்றது.
இவ்வாறு குழந்தைகளை ஓடி ஆடி விளையாடுவதன் மூலம், அவர்களுக்கு அதிக எடை ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது என்றும், இளம் வயதிலேயே சரியாக உருவாகும் இந்த எடை முறைமை வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது என்றும் கூறப்படுகின்றது.
3. எல்லாவற்றுக்கும் முடியாது, வேண்டாம் என்று கூறுவது
குட்டிச் சுட்டிகளின் இன்னொரு கெட்டப் பழக்கம், அவர்களிடம் கேட்பதற்கெல்லாம் இல்லை, முடியாது, வேண்டாம் என்று சொல்வது. ஆனால் இது நமக்கு ஒரு கெட்ட பழக்கமாகத் தோன்றினாலும், இதன் பின்னணியில் உள்ள உண்மைக் கதை இதுதான்.
பொதுவாக, ஒரு குழந்தை எல்லாவற்றுக்கும் வேண்டாம், முடியாது என்று 2.5 முதல் 3 வயதிற்குள் தான் சொல்லத் தொடங்குகிறது.
அந்த வயதில் தான், அவர்கள் தமது பெற்றோரின் ஒரு பகுதியாக இல்லை, தான் குடும்பத்தில் ஒரு தனி அடையாளத்துடன் அங்கத்தவராக இருப்பவர் என்பதை அவர்கள் படிப்படியாக புரிந்துகொள்கிறார்கள்.
அதே போல் அந்த குடும்பத்தில் அவர்களுக்கு என்று ஒரு இடத்தை அமைத்து கொள்ள, தனக்கும் விடயஙகளை நிராகரிக்க, ஏற்று கொள்ள முடியும் என்பதை வௌிப்படுத்த முனைவார்கள்.
எனவே இது ஒரு கெட்ட பழக்கமாக நமக்குத் தோன்றினாலும் அது அவர்களின் வளர்ச்சியின் ஒரு கட்டமாகும். இதனை நாம் கவனமாக கையாள வேண்டியது தான்.
4. நள்ளிரவில் எழுந்திருத்தல்
குழந்தைகள் பிறந்த ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் பால் குடிப்பதற்கு நள்ளிரவில் எழுந்து விடும். ஆனால், குழந்தை படிப்படியாக சற்று வளர்ந்த பின்னர் திடீரென நள்ளிரவில் விழிக்க ஆரம்பித்தால், அது கோபப்பட வேண்டிய விடடயமல்ல, அதுவொன்றும் குழந்தையின் நோயும் அல்ல.
அவர் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும்போதும், புதிய உணர்வுகளை எதிர்கொள்ளும்போதும், இதுபோன்ற தூக்கப் பிரச்சனைகள் ஏற்படலாம்.
மாலையில நடந்த ஒரு விரும்பத்தகாத நிகழ்வு, அதாவது சோகம் அல்லது கோபம் போன்ற நிகழ்வுகள் திடீரென்று குழந்தையை நள்ளிரவில் எழுப்புவதற்கு காரணமாக இருக்கலாம்.
மேலும் புதிய விடயங்களைக் கற்றுக் கொள்ளும்போது, அந்த விடயங்களைப் பற்றிய ஆர்வத்தின் காரணமாக, குழந்தை விழிப்புடன் இருக்க அதிக விருப்பத்துடன் இருக்கலாம். எனவே பெற்றோர் பொறுமையாக குழந்தையை அமைதிப்படுத்தி தூங்க வைக்க வேண்டும்.
5. பெற்றோர் சொல்வதைக் சற்றேனும் கேட்காமல் இருப்பது
இதுவும் பல சிறு குழந்தைகள் செய்யும் ஒன்றுதான். அவர்கள் நாம் சொல்வதைக் கேட்காமல் தமது விருப்பப்படி வேலைகளை செய்து பார்ப்பதற்கு ஆசை படும் காலம் வரும்.
இதுவும் நமக்கு தலைவலியாக இருந்தாலும், குழந்தையின் வளர்ச்சியின் ஒரு கட்டமாகும். முன்பு குறிப்பிட்டபடி, குழந்தை ஒரு தனி மனிதன் என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் வரும் ஒரு பண்பு இது.
அவர் தனிப்பட்ட முடிவுகளை எடுக்க, அவருக்கு விரும்பியதைச் செய்ய முனைகிறார். நாம் சொல்வதை மட்டும் கேட்டு அப்படியே இருப்பது நன்றாக இருந்தாலும், நாம் வளர்ப்பது ரோபோக்கள் இல்லை என்பதால், குழந்தைகளின் இந்தப் பழக்கத்தையும் பொறுமையாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
6. உடனடி கோபம்
சிறு குழந்தைகள் எந்த காரணமும் இல்லாமல் திடீரென கோபப்பட்டு அழுவது மற்றொரு எரிச்சலூட்டும் விஷயம்.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். பசி, துக்கம், போல் அவர்களுக்குப் பிடித்த ஒன்று கிடைக்காத போது ஏற்படும் கோபத்தால் கூட இருக்கலாம்.
அதனால் இந்த நேரத்தில் பதற்றப்பட்டு கொண்டு குழந்தையை தலாட்ட போவதும், கோப்பட்டு குழந்தையைத் திட்டவும், அடிக்கவும் போவது வேலகை்காகது.
சிறந்த யுக்தி என்னவென்றால் அந்த சந்தர்ப்பத்தை நழுவவிடுவது தான், அல்லது குழந்தையின் கவனத்தை வேறு பக்கம் திருப்புவது அல்லது அப்படியும் இல்லையெனின் அழுவதை சற்று கண்டுகாமல் விட்டு விடலாம்.
7. உணவை நிராகரித்தல்
நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று உணவை மறுப்பதும் எரிச்சலடைய செய்யும் வேலைதான்.
இதற்கும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். பல் முளைத்தல் போன் உடல், சுகாதார காரணங்களைப் போல், விளையாட்டின் மேல் உள்ள ஆசையினாலும் உணவின் மீதான கவனம் குறையும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் குழந்தையை சாப்பிட வற்புறுத்துவது புத்திசாலித்தனம் அல்ல. இது குழந்தைக்கு உணவின் மீதான ஆர்வத்தை, விருப்பத்தை இழக்கச் செய்யும்.
அதனால் நிதானமாக அவர்களின் கவனம், ஆர்வம் சாப்பாட்டின் மீது உண்டாகும் படியான விடயங்கள், வித்தியாசமான உணவுகள், அழகிய முறையில் வித விதமாக உணவுகளை கொடுப்பது போன்ற விடயங்களை கையாள வேண்டும்.
ரீஸாஹ் ஜஸ்மின்
தகவல் | சரிநிகர்