மட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்தியசாயி சஞ்ஞீவனி வைத்திசாலைக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ நேற்று (18) பிற்பகல் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அவர் ஸ்ரீ சத்தியசாயி சஞ்ஞீவனி வைத்தியசாலையால் மக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள், மற்றும் ஏனைய மருத்துவ சேவைகள், தொடர்பிலும் வைத்தியசாலையின் தற்போதைய நிலவரங்கள், இதுவரையில் எத்தனை சத்திர சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன, போன்றவற்றை கேட்டறிந்து கொண்டதுடன், அங்குள்ள வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிடம், கலந்துரையாடி விருந்தினர் பதிவேட்டிலும் கையொப்பமிட்டார்.
அமைச்சரின் இந்த விஜயத்தின்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.முரளீஸ்வரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் க.கலாரஞ்சினி, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் க.புவனேந்திரநாதன், ஸ்ரீ சத்தியசாயி சஞ்ஞீவனி வைத்தியசாலையின் பணிப்பாளர், உள்ளிட்ட பலர் இணைந்திருந்தனர்.
இதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து வரும் நோயாளிகளுக்கும், ஏனைய நோயாளிகளுக்கும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுவரும் சேவைகள் தொடர்பிலும், இதுவரையில் இந்த வைத்தியசாலையில் 3000 சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ சத்தியசாயி சஞ்ஞீவனி வைத்தியசாலை நிருவாகம் இதன்போது அமைச்சரிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.