ரமழான் மாதத்தை வரவேற்போம்

ரமழானை வரவேற்போம்
அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே (ﷻ) சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ﷺ) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

எம்மை நோக்கி வந்திருக்கும் இப் புனித மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்க வேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் நடைமுறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.

ரமழான் மாதத்தில் வயதுக்கு வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு பிடிப்பது கடமையாகும்.

இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்டதோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்” (அல்பகரா 2:183).

ரமழான் மாதத்திற்கு உரிய பிறையை பார்ப்பதன் மூலமாகவோ, அல்லது ரமழான் மாதத்திற்கான பிறை தென்படாத பொழுது ஷஃபான் மாதத்தை முப்பதாக கணக்கிடுவதன் மூலமோ நோன்பு நோற்பது கடமையாகும்.

”பிறைப் பார்த்து நோன்பு பிடியுங்கள், மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்பட வில்லையென்றால் ஷஃபானை முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

    ரமழான் மாதத்தின் சிறப்பு:

ரமழான் மாதம் எத்தகையது என்றால், மனிதர்க்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்” (அல்பகரா 2: 185).

ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ﷺ) அவர்களை சந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்” (புகாரி)..

இச்செய்திகள் அல் குர்ஆனுக்கும் ரமழானுக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகின்றது. அல் குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக் கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இத்தினத்திலிருந்தாவது அல் குர்ஆனை படித்து, அதனை ஆராய்வது, அதன் வழி நடப்பதன் மூலம், தன் வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் நிலைகளிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தையும் ஈடுபாட்டையும் அதிகப்படித்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது சிறப்பு: ”ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின வாயில்கள் திறக்கப்படும், நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு விடும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என நபிகளார் (ﷺ) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

மூன்றாவது சிறப்பு: ”ரமழானின் ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது” என நபிகளார் (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

நான்காவது சிறப்பு: ”ஐ வேளைத் தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மற்றொரு ஜும்ஆ, ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு இடையில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகும். பெரும் பாவங்களைத் தவிர” என நபிகளார் (ﷺ) அவர்கள் கூறினார்கள்.

ஐந்தாவது சிறப்பு: ரமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் எனும் ஒரு இரவு இருக்கின்றது, அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.

    இம்மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்புகள்:

01-    நோன்பு அடியானுக்காக பரிந்து பேசும்:

 

    ”நோன்பும், அல் குர்ஆனும், மறுமை நாளில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், ”நான் இந்த அடியானை உணவை விட்டும், ஆசைகள் இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இந்த அடியானின் விடயத்தில் பரிந்துரைப்பாயாக!” அல் குர்ஆன் கூறும் ”நான் இந்த அடியானை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இந்த அடியானுக்கு பரிந்துரை செய்வாயாக” என நபிகளார் (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

 

02-    நோன்பை போன்றதொரு அமல் இல்லை:

 

    ”நான் நபிகளார் (ﷺ) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் (ﷻ) திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு விடயத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு நபிகளார், நான் உங்களுக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்று இல்லை” என கூறினார்கள், என அபூ உமாமா  (رضي الله عنه) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸஈ).

 

03-    கணக்கின்றி கூலி வழங்கப்படும்:

 ”ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகின்றது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்கு உரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்” என அல்லாஹ் (ﷻ) கூறுவதாக நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

04-    நோன்ற்கான கூலி சுவர்க்கம்:

 

    ”நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாயில் இருக்கின்றது, அதற்கு ரய்யான் என்று கூறப்படும். அவ்வாயில் வழியாக நோன்பாளிகள் மாத்திரமே உள்ளே நுழைவார்கள், அவர்களல்லாது வேறு யாரும் நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாயில் மூடப்பட்டு விடும்” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

 

05- நரகத்தை விட்டும் பாதுகாப்பு:

 

    ”எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்கின்றாரோ அல்லாஹ் (ﷻ) அவரது முகத்தை நரகத்தை விட்டும் எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்தப்படுவான்” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

 

06-    நரகத்தை விட்டு தடுக்கும் கேடயம்:

 

    ”நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்).

 

07-    முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்:

 

    ”எவர் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தும் நோன்பு நோற்கின்றாரோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

 

08-    மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்:

    ”வாலிபர்களே! உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும், மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டும் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும்.

எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

09-    நோன்பாளிக்கு இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சி:

     ”‘நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளது: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, அடுத்து (நாளை மறுமையில்) அவனது இறைவனை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

10-    கஸ்தூரியை விடவும் சிறந்த வாடை:

    ”என் உயிர் எவன் கை வசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் (ﷻ) கஸ்தூரியை விட சிறந்ததாகும்” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

மேற்கூறப்பட்ட ஹதீஸை சிலர் தவறாக விளங்கிக் கொன்டதன் காரணத்தால், பஜ்ருக்கு அதான் சொன்னது முதல் நோன்பை திறக்கும் வரை பல் துலக்காமல் இருக்கின்றனர்.

இதனால் சிலர் முன்னால் இருந்து பேசுவதோ அவர்களுக்கு பக்கத்திலிருந்து தொழுவதோ பலருக்கு கஷ்டமாக இருக்கின்றது. நபி (ﷺ) அவர்கள் நோன்பு வைத்த நிலையில் கணக்கின்றி பல் துலக்குவார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தி இவர்களுக்கு தெரியாததே இதற்குக் காரணம்.

    ரமழான் நோன்புடன் தொடர்புடைய சில சட்ட திட்டங்கள்:

நிய்யத்து வைப்பதன் அவசியம்:
‘எவர் பஜ்ருக்கு முன்னர் நோன்பிற்குரிய நிய்யத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (நஸாஈ).

நம்மில் பெரும்பாலான முஸ்லிம்கள் நிய்யத்து வைப்பதை தவறாக விளங்கி வைத்துள்ளனர், ”நவய்து ஸவ்ம அதன் பர்ள ரமழானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா” ரமழான் மாதத்தின் பர்ளான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து வைக்கிறேன் என்று பரவலாகச் சொல்லி வருகின்றனர்.

இதற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமோ அடிப்படையோ இல்லை, நபிகளார் (ﷺ) அவர்களிடமோ, ஸஹாபாக்களிடமோ இதற்கு எந்த முன்மாதிரியும் கிடையாது.

நிய்யத்தை வாயால் மொழிவது (பித்அத்) நபி வழிக்கு முரணான வழிகேடாகும். ”நமது விடயத்தில் எவர்கள் புதிய விடயங்களை ஏற்படுத்திச் செய்கிறார்களோ அது மறுக்கப்படும்” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

நிய்யத்தை ஒருவர் மனதினால் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர வாயால் மொழிவது மார்க்கத்துக்கு முரணான ஒரு செயலாகும்.

ஸஹர் உணவு உட்கொள்வதின் சிறப்பு:
”நீங்கள் ஸஹர் உணவை உட்கொள்ளுங்கள் நிச்சயமாக அதில் பரகத் இருக்கின்றது” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

நமது நோன்புக்கும் வேதத்துடையவர்களின் நோன்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஸஹர் உணவு உட்கொள்வதாகும்” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்).

ஸஹர் உணவு பரக்கத் நிறைந்ததாகும், அதனை நீங்கள் விட்டுவிட வேண்டாம். ஒரு மிடர் தண்ணீரையாவது குடிப்பதை கொண்டு ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்கள் மீது அருள்புரிகின்றான், வானவர்களும் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு அருள் வேண்டி பிரார்த்திக்கின்றனர்” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

ஸஹர் செய்வதை பிற்படுத்துவதும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்துவதும்:
எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர்” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

நிச்சயமாக எனது அடியார்களில் எனது நேசத்திற்குரியவர்கள் யாரெனின் நோன்பு திறப்பதை அவசரப்படுத்துபவர்களாவர்” என அல்லாஹ் கூறுவதாக நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை:

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

தஹபல் லமஊ வப்தல்லதில் உரூவ்கு வஸபதல் அஜ்ரு இன் ஷா அல்லாஹ்”

பொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது” இந்த பிரார்த்தனை உறுதியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவாகி இருக்கின்றது.

அபூதாவுதில் பதிவாகி இருக்கும் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது, வேறு சில பிரபலமான பிரார்த்தனைகள் ஓதப்பட்டு வந்தாலும் அவைகள் பலவீனமான ஹதீஸ்களாகும்.

ஒருவரை நோன்பு திறக்கவைப்பதன் சிறப்பு:
எவர் ஒருவரை நோன்பு திறக்க ஏற்பாடு செய்து கொடுக்கின்றாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே கூலி வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி).

இரவுக் காலங்களில் நின்று வணங்குவது:
ஆயிஷா (رضي الله عنها) அவர்களிடம் நபி (ﷺ) அவர்களுடைய ரமழான் கால (இரவுத்) தொழுகை எவ்வாறு இருந்தது எனக் கேட்கப்பட்டது, அதற்கு ஆயிஷா (رضي الله عنها) அவர்கள், நபி (ﷺ) அவர்களுடைய இரவுத் தொழுகை ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் பதினொன்றாகவே இருந்தது” என கூறினார்கள். (புகாரி).

எவர் ரமழான் காலங்களில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

உம்ராச் செய்வது:
எவர் ரமழானில் உம்ராச் செய்கின்றாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றாவார்” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

    ஒரு நோன்பாளி செய்வதற்கு விரும்பத்தக்க விடயங்கள்:

அதிகமாக அல் குர்ஆனை ஓதுவது, அதை விளங்குவது, மார்க்க வகுப்புக்களில், விடயங்களில் கலந்து கொள்வது, பிரார்த்தனையில், திக்ர்களில் ஈடுபடுவது, நல்லவற்றையே பேசுவது, நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது, ஸதகா தான தர்மங்கள் கொடுப்பது.

நபி (ﷺ) ரமழான் காலங்களில் ஜிப்ரீல் (அலை)யை சந்திக்கும் போது வேகமாக வீசும் காற்றைவிட தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.” (புகாரி).

    ஒரு நோன்பாளி செய்யக் கூடாதவை:

பொய் சொல்வது, புறம் பேசுவது, கோள் சொல்வது, அநாகரீகமாக நடந்து கொள்வது, வீணான காரியங்களில் நேரத்தை செலவழிப்பது, பார்க்கக் கூடாதவைகளைப் பார்ப்பது, கேட்கக் கூடாதவைகளைக் கேட்பது. இவைகளை ஒரு முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தவிர்ந்திருக்க வேண்டும்.

எவனொருவன் பொய் சொல்வதையும், அதன் படி நடப்பதையும், விட்டு விடவில்லையோ அவன் பசியோடும், தாகத்துடனும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த அவசியமுமில்லை, என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (புகாரி).

எத்தனையோ நோன்பாளிகள் அவர்களினது நோன்பின் மூலமாக அவர்கள் பெற்றுக் கொண்டது பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவுமில்லை” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத், இப்னுமாஜா).

ரமழான் மாதத்தில் நோன்பின் மூலம் அல்லாஹ் (ﷻ) நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கும் அந்த உயரிய பண்புகளை அடைய முயற்சிப்போமாக!

-அதிரை தமீம்

Assalamu Alaikkum!
Follow us to get more useful articles like this soon.
Subscribe to our Sarinigar Telegraph site. Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply