வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை (23) மாலை உயிரிழந்ததாக அமெரிக்க ரகசிய சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள 17 ஆவது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூவில் உள்ள சோதனைச் சாவடியை அந்த நபர் அணுகி, தனது பையிலிருந்து துப்பாக்கியை வெளியே எடுத்து அதிகாரிகளை நோக்கிச் சுடத் தொடங்கினார்.
அதிகாரிகள் பதிலுக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் அந்த சந்தேக நபர் காயமடைந்தார் என்று அந்த அமைப்பு கூறியது.
இந்தப் பரஸ்பரச் துப்பாக்கிச் சூட்டில் வழிப்போக்கர் ஒருவர் காயமடைந்தார் என்றும் அந்த அறிக்கை கூறியது.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு சட்ட அமுலாக்க அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் சட்ட அமுலாக்கப் பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை என்று இரகசிய சேவை அமைப்பு தெரிவித்ததுடன், துப்பாக்கிச் சூடு நடந்தபோது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்தார் என்றும் அது குறிப்பிட்டது.
வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் இரவு விருந்து நடைபெற்ற ஹோட்டலுக்குள் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, ட்ரம்ப் மற்றும் பிற அதிகாரிகள் அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
