சென்னை: அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை தேர்தல் வெற்றி விழாவாக நடத்த வேண்டும் என விசிக நிர்வாகிகளுக்கு அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் முகநூல் நேரலையில் பேசியிருப்பதாவது: ஏப்.14-ம் தேதி சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் அவரது உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, சமத்துவ நாள் உறுதி மொழியேற்க வேண்டும். இந்த நிகழ்ச்சியையே தேர்தல் வெற்றி விழா பேரணியாக, சமத்துவ நாள் அணிவகுப்பாக நடத்த வேண்டும். இது தொடர்பாக முறையாக காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிகழ்ச்சிகளில் கட்டுப்பாடுடன் பங்கேற்க வேண்டும்.
நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மேலிட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள், பெண்களை அதிக அளவில் பங்கேற்க செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏப்.14-ம் தேதி பெங்களூருவில் அம்பேத்கர் சிலை சிறப்பு விழா நடைபெறுகிறது.
இதில் நானும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இருக்கிறேன். கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் நடைபெறும் சமத்துவ வார நிகழ்ச்சியில் தலைமை நிலையச் செயலாளர் இளஞ்சேகுவாரா பங்கேற்கிறார். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா பகுதிகளிலும் விசிக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.