அமெரிக்காவில் கடந்த நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், பொதுமக்களை சந்தித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் பகுதியில் நடந்த பேரணியில் டிரம்ப் பங்கேற்றார்.
அப்போது, டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில், துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டு கொல்லப்பட்டார். அவர், தாமஸ் குரூக் என்ற 20 வயது இளைஞர் என பின்னர் அடையாளம் காணப்பட்டார்.
இந்த தாக்குதலுக்கு பின், அமெரிக்க உளவு பிரிவினர் அவரை மேடையில் இருந்து உடனடியாக பாதுகாப்பாக வாகனத்தில் அழைத்து சென்றனர். இந்நிலையில், டிரம்பை கொலை செய்வதற்கு ஈரான் நாட்டில் சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.
ஈரான் நாட்டின் குத்சு படையின் தலைவராக இருந்தவர் காசிம் சுலைமானி. இவர், கடந்த 2020-ம் ஆண்டில் ஆளில்லா விமானம் கொண்டு நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து, அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் மற்றும் முன்னாள் வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ உள்ளிட்டோருக்கு ஈரானில் இருந்து கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. இதன் விளைவாக டிரம்புக்கு எதிராக தொடர்ந்து அச்சுறுத்தல்கள்
வருகின்றன. இந்த ஈரானின் சதி முறியடிக்கப்பட்டதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதித்துறை அறிவித்தது.
இந்நிலையில் ஈரான் மீது அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் உத்தரவுகளில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் ஈரான் தன்னைக் கொன்றால் அதை ‘அழிக்க’ வேண்டும் என்று ஆலோசகர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக கூறினார். ஈரான் என்ற நாடே இருக்காது அவர்கள் அழிக்கப்படுவார்கள், எதுவும் மிச்சமிருக்காது என கடும் எச்சரிக்கை விடுத்தார்.