செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் நாளை(23) மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்காக அனைவரும் ஆதரவு வழங்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று(22) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
எதிர்வரும் ஒரு சில நாட்களில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கை விஜயத்தை முன்னிட்டு செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாகவும் அத்தோடு தமிழர்களுக்கு மறுக்கப்படும் நீதி சம்பந்தமாகவும் அவருடைய கவனத்தை ஈர்க்கும் வகையாக யாழ்ப்பாணத்தில் செம்மணியில் மாபெரும் அணையா விளக்கு போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருப்பதாக அறியக் கூடியதாக இருக்கின்றது.
அந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணத்திலும் அவ்வாறான ஒரு போராட்டத்தினை அடையாளமாக நாளைய தினம் மாலை 6 மணிக்கு மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் -கோட்டைக்கல்லாறு பாலத்தில் அருகாமையில் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
இந்தப் போராட்டத்திற்கு எங்களுடைய கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து தமிழ் உறவுகளும் அனைத்து உணர்வாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக ஒரு அழைப்பை விடுகின்றோம்.
நாளைய தினம் மாலை 6 மணிக்கு தீப்பந்தங்கள் ஏந்தி பாலத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பித்து இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக இருக்கின்றோம்.
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இந்த போராட்டம் 23, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இந்த மூன்று நாட்களில் நடைபெற இருக்கின்றது.
யாழ் மாவட்டத்திலே அந்த போராட்டத்தை ஆரம்பிக்கும் நேரத்தில் போராட்டத்திற்கு ஆதரவாக வலுச்சேக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து இந்த விடயத்திற்கான பூரணமான ஆதரவும் இந்த விடயத்தை ஆராய வேண்டும் என்று நாங்களும் விரும்புகின்றோம் என்கின்ற செய்தியை சொல்வதற்காக இந்த மாபெரும் போராட்டத்தை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றோம். என தெரிவித்தார்.