இலங்கையுடனான தனது உறவுகளை வலுப்படுத்த ,வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்கு தமது முழு ஆதரவினை வழங்குவதாக இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தூதுவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இலங்கைக்கான பிரேசில் தூதுவர் செர்ஜியோ லூயிஸ் கேனீஸ் மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் ஆண்ட்ரஸ் மார்செலோ கோன்சலஸ் கரிடோ ஆகியோர் சமீபத்தில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் சந்தித்துக் கலந்துறையாடினர்.
அந்தவகையில் கியூபாவின் தூதுவர் ஆண்ட்ரஸ் மார்செலோ கோன்சலஸ் கரிடோ மற்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுடனான சந்திப்பின் போது ” இருவரும் இலங்கை கியூபாவுடன் நீண்டகாலமாகப் பேணி வரும் சிறந்த இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை நினைவு கூர்ந்ததுடன், கொழும்பில் கியூபாவின் தேசிய வீரர் ஜோஸ் மார்டியின் சிலையை நிறுவுதல், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், முதலீடுகள், கல்வி, சுகாதாரம், கலாச்சாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு, சர்வதேச மன்றங்களில் ஆதரவுப் பரிமாற்றம் மற்றும் உயர் மட்ட வருகைகளின் பரிமாற்றம் போன்ற துறைகள் தொடர்பில் ஆலோசித்தனர்.
அதேசமயம் பிரேசிலின் தூதுவர் செர்ஜியோ லூயிஸ் கேனீஸ் மற்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்தித்தபோது, இருவரும் இலங்கைக்கும் பிரேசிலுக்கும் இடையே பல தசாப்தங்களாக நிலவிவந்துள்ள சிறந்த உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை நினைவு கூர்ந்தனர்.
மேலும், பிரேசில் ஒத்துழைப்பு முகவரகம் (ABC) இலங்கைக்கு கரும்புத் தொழில் மற்றும் பாலுற்பத்திக் கால்நடை திட்டங்களுக்கு தொழில்நுட்ப உதவி வழங்குதல், பிரிக்ஸ் இல் உறுப்பினர் பதவிக்கான இலங்கையின் கோரிக்கை, இரண்டாவது அரசியல் ஆலோசனைகளை நடத்துதல், உயர் மட்ட வருகைகளின் பரிமாற்றம், இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், நிலுவையில் உள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள்/புரிந்துணர்வு ஒப்பந்தங்களை காலதாமதமின்றி இறுதி செய்தல், விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பு போன்றவை குறித்து கலந்துரையாடினர்.
பிரேசில் தூதுவர் லூயிஸ் கேணீஸ் மற்றும் கியூபா தூதுவர் கோன்சலஸ் கரிடோ ஆகிய இருவரும், எதிர்வரும் ஆண்டுகளில் முறையே பிரேசில் மற்றும் கியூபாவுடனான இலங்கையின் நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதில் தங்கள் முழுமையான அர்ப்பணிப்பையும் ஆதரவையும் உறுதி செய்தனர்.
பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடனான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை பரஸ்பர நன்மைக்காக மேம்படுத்துவது குறித்த புதிய அரசாங்கத்தின் முழுமையான அர்ப்பணிப்பையும், ஆதரவையும் உறுதியளித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிரிவிற்கான பணிப்பாளர் நாயகம், சி. ஏ. சாமிந்தா ஐ கொலோன்னே மற்றும் கொழும்பில் உள்ள பிரேசில் தூதரகத்தின் பிரதித் தலைவர் மோனிகா மரியா மெய்ரெல்லஸ் நாசர் மற்றும் கொழும்பில் உள்ள கியூபா தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் மிரியம் ரோசா நவரோ ஆகியோர் கலந்துரையாடல்களில் இணைந்துகொண்டனர்.
கியூபாவும் பிரேசிலும் முறையே 1959, 1960 ஆகிய ஆண்டுகளில் இலங்கையுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தின. இரு நாடுகளும் இலங்கையில் வதிவிட இராஜதந்திர தூதர்ப் பணியகங்களை நிறுவியுள்ள அதேவேளை, இலங்கையும் இரு நாடுகளிலும் இராஜதந்திரத் தூதர்ப் பணியகங்களை நிறுவியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.