புதுடெல்லி: 2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.329.05 கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்துக்கான (அக்டோபர் – செப்டம்பர்) கரும்பு பயிருக்கு உரிய நியாயமான மற்றும் ஆதாய விலையை குவிண்டாலுக்கு ரூ.355 வீதம் 10.25% அடிப்படை மீட்பு விகிதத்துக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இது 10.25%க்கு அதிகமாக உள்ள ஒவ்வொரு 0.1% -க்கும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3.46 பிரீமியம் தொகை வழங்குகிறது. இந்த விகிதத்துக்கு குறைவாக உள்ள மீட்பில் ஒவ்வொரு 0.1%-க்கும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3.46 பிரீமியம் தொகை குறைக்கப்படுகிறது. இருப்பினும், கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், 9.5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு எந்தவித விலக்கும் அளிக்கப்படுவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அத்தகைய விவசாயிகளுக்கு வரும் 2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் கரும்புக்கான குவிண்டால் ஒன்றுக்கு ரூ.329.05 கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.