சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் இலங்கை மின்சார சபை கைச்சாத்திட்டுள்ளது. சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையமானது சஹஸ்தனவி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்தின் உரிமமானது 25 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை மின்சார சபைக்கு பரிமாறப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டு இலங்கை மின்சார சபை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. 350 மெகாவாட் திறனுடைய சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையமானது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையமாகும்.
இது திறந்த சுழற்சி செயற்பாட்டில் தேசிய மின்கட்டமைப்பிற்கு மின்சாரத்தை வழங்கும் எனவும் இந்த மின் நிலையம், குறிப்பாக இரவு நேரங்களிலும் குறைந்த காற்றழுத்த நேரங்களிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்குத் தேவையான ஆதரவை வழங்கும் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் Regasified Liquefied Natural Gas (R-LNG) மூலம் இயக்கப்படுவதால், இது கோரிக்கையின் அடிப்படையில் மின்சாரத்தை வழங்கும் திறனை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்தின் மின்உற்பத்தி செயற்பாடுகள், 2028 ஆம் ஆண்டு முதல் டீசலில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றமடைவதால், எரிபொருள் செலவுகளை 50 வீதம் குறைக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இது சூரிய மற்றும் காற்றாலை உற்பத்தி திறனை விரிவுபடுத்தும் எனவும் நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.