(எம்.மனோசித்ரா)
மின்சாரக் கட்டணத்தை 18.3 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு மின்சாரசபை முன்வைத்துள்ள நியாயமற்ற கோரிக்கை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு தெளிவுபடுத்துவோம். அது மாத்திரமின்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (18) கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மின் கட்டணத்தை 18.3 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கத்தால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னர் 30 சதவீதத்தால் மின் கட்டணம் குறைக்கப்படும் எனக் கூறிய தேசிய மக்கள் சக்தி தான், இன்று கட்டண அதிகரிப்பிற்கான யோசனையை முன்வைத்துள்ளது.
கடந்த காலங்களில் ஊழல், மோசடிகள் அதிகரித்துள்ளமையினாலேயே மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதாகக் கூறினர். அவ்வாறெனில் தற்போது மீண்டும் ஊழல் அதிகரித்துள்ளதா?
ரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்தில் பல பில்லியன் இலாபமீட்டிய மின்சாரசபை தற்போது நஷ்டமடைந்துள்ளமைக்கான காரணம் என்ன? 18 சதவீதத்தால் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.
தமது பலவீனமான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் மீது பழி சுமத்தக் கூடாது. அரசாங்கத்தின் பொய்கள் தற்போது பகிரங்கமாக வெளிவர ஆரம்பித்துள்ளன.
மின்சாரசபையின் இந்த நியாயமற்ற கோரிக்கை தொடர்பில் நாம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு தெளிவுபடுத்துவோம். அது மாத்திரமின்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக நாம் முன்னிற்போம்.
தேசிய மக்கள் சக்தி பொய் என்பதை அறியாமல் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர். தற்போது சகல தேர்தல்களும் நிறைவடைந்துள்ளதால் ஜே.வி.பி. அதன் உண்மையான முகத்தை காண்பிக்க ஆரம்பித்துள்ளது என்றார்.