அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு – ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் ரூ 90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பல்கலைக்கழக மாணவி ஒருவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24ம் தேதி புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஞானசேகரனை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 தேதி கைது செய்தனர். பின்னர், கோட்டூர்புரம் காவல்துறை விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 28ம் தேதி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த 2025 ஜனவரி மாதம் 5ம் தேதி ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். வழக்கை விசாரித்த சிறப்பு புலானாய்வு குழு, கடந்த பிப்ரவரி மாதம் 24 ம் தேதி சென்னை சைதாப்பேட்டை 9 வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக சுமார் 100 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் இந்த வழக்கில் ஞானசேகரன் ஒருவர் மீது மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டது.

பின்னர் இந்த வழக்கின் விசாரணையை சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு கடந்த மார்ச் 7ம் தேதி மாற்றப்பட்டது. இந்த நிலையில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும் ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதால், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை மகளிர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8 ம் தேதி தள்ளுபடி செய்து அன்றைய தினமே குற்றச்சாட்டு பதிவு செய்தது.

அதில் பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல், பெண்ணை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்தல், நிர்வாணப்படுத்துதல், மிரட்டல், அந்தரங்க புகைப்படம் எடுத்து வெளியிட்டது, பெண் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட தகவல் தொழில் நுட்ப சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் மற்றும் பி.என்.எஸ்.எஸ் சட்டத்தின் 12 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து சென்னை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. தினந்தோறும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் காவல் துறை தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் காவல்துறை தரப்பில் சுமார் 75 சான்று ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 20ம் தேதி வழக்கின், அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்த பின்னர் இரு தரப்பினரும் இறுதி வாதங்களை முன்வைத்தவர். அதில் காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தி, குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உள்ளது என வாதிட்டார். இவர் தான் குற்றம் புரிந்து உள்ளார் எனவே அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார்.

குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே காவல்துறை இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என வாதிட்டார். இரு தரப்பு இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் மே 28ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்ற அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு தீர்ப்புக்காக குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன், மே 28 ம் தேதி காலை 10.30 மணிக்கு முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரிடம், “குற்றத்தை ஏற்கிறீர்களா?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு ஞானசேகரன், அப்பா இறந்துவிட்டதால் தாயை பராமரிக்க வேண்டும் என்பதால், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். தனக்கு 8 வது படிக்கும் பெண் குழந்தை இருப்பதாகவும், நீதிமன்றம் கருணை காட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

அரசு தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், அரிதிலும் அரிதான இந்த வழக்கில் ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும். குற்றவாளிக்கு எந்த கருணையும், இரக்கமும் காட்ட கூடாது. அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த நிலையில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரங்களை ஜூன் 2ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். அந்த வகையில் இன்று காலை சென்னை புழல் சிறையிலிருந்து ஞானசேகரன் சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, நீதிபதி ராஜலட்சுமி முன்பு முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அப்போது அவருக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத அளவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனையையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்ட நிலையில் அவருக்கு ரூ 90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பாக விசாரணை நடத்திய காவலர்களுக்கு நீதிபதி பாராட்டுகளையும் தெரிவித்தார்.

 

நன்றி

Leave a Reply

error: Content is protected !!