அஸ்வெசும நலப் பயனாளித் திட்டம் நிறுத்தப்படுவதாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
மே மாதம் முதல், இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும் என சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தவறானது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (மே 22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை சுட்டிக்காட்டி உள்ளது.
14 இலட்சம் அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்காக, 11 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
அதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தைப் பெறும் பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளின் மூலம் மே மாதத்துக்கான கொடுப்பனவினைப் பெற்றுக்கொள்ள முடியும் என, நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.