பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் தொழில் நீக்கம் தொடர்பில் விசாரிக்கும் இலங்கை அதிகாரிகள் கோரும் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு சர்வதேச ஆடைத்தொழில் ஜாம்பவான்கள் இன்னும் கால அவகாசம் கோரியுள்ளனர்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேல் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள நெக்ஸ்ட் (NEXT) ஆடைத்தொழிற்சாலையின் நிர்வாகிகள் அவ்வாறு கால அவகாசம் கோரியது, அத்தொழிற்சாலையின் ஊழியர்கள் 1,214 பேரின் சேவையை முடிவுறுத்துவதை முன்மொழிந்து, மே மாதம் 20ஆம் திகதி அனுப்பப்பட்ட விண்ணப்பப்படிவத்தை சேவை முடிவுறுத்தல் பிரிவின் உதவி தொழில் ஆணையாளர் மே 30ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொண்ட சந்தர்ப்பத்தில் ஆகும்.
தொழிற்சாலையை மூடுவது தொடர்பில் தொழிலாளர்களுக்கும் தொழில் திணைக்களத்துக்கும் ஆடைத்தொழில் ஜாம்பவான் ஒன்றுக்கொன்று முரணான காரணங்கற்பித்தல்களை மேற்கொண்டுள்ளமையை தொழிற்சங்கங்கள் பகிரங்கப்படுத்தியுள்ளன.
தொழிலாளர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி அச்சந்தர்ப்பத்தில் இணைந்திருந்த சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொதுச்சேவை தொழிற்சங்கத்தின் இணைச்செயலாளர் அன்டன் மார்க்கஸ், அதன்படி நெக்ஸ்ட் ஆடைத்தொழிற்சாலையின் விண்ணப்பம் ஜூன் 4ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கிறார்.
“சில ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு நிறுவனத்துக்கு இன்னும் கால அவகாசம் வேண்டும் எனக்கூறப்பட்டது. அவை தொழிலாளர்கள் பதவி விலகியதாகச் சொன்ன நபர்களின் பெயர்கள் மற்றும் அந்த கடிதங்களின் பிரதிகள்.”
சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள நெக்ஸ்ட் ஆடைத்தொழிற்சாலையை மீண்டும் திறந்து தொழிலாளர்களின் தொழில்வாய்ப்பை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொதுச்சேவை தொழிற்சங்கத்தின் இணைச்செயலாளர் அன்டன் மார்க்கஸ் தொழிலாளர்களது சேவையை முடிவுறுத்துவதற்கு நிறுவ சமர்ப்பித்துள்ள விண்ண்ப்பத்துக்கு எதிர்ப்பைத் தாக்கல் செய்வதற்கு தாம் 10 நாள் கால அவகாசம் கோரியதாகக் குறிப்பிட்டார்.
“தொழிலாளர் தரப்பிலிருந்து நாம் கூறியது என்னவென்றால், இது தன்னார்வ நட்ட ஈட்டு முறை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. எவ்வாறாயினும் நிறுவனம் சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்துக்கு எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காக நாம் 10 நாட்கள் கால அவகாசம் வழங்குமாறு கேட்டுள்ளோம். அதன்படி அது தொடர்பில் நாள் குறிப்பதை 4ஆம் திகதி (இன்று) செய்வதற்குத் தீர்மானித்துள்ளோம்.
சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் குறிப்பிடுவதாவது, தொழிற்பாட்டுக்கிரயம் அதிகரிப்பு மற்றும் சில ஆண்டுகளாக தொழிற்சாலை இலாபம் ஈட்டாமை இவ்வாறு தொழிற்சாலையை மூடுவதற்கான காரணங்களாக நிர்வாகத்தினர் தொழிலாளர்களுக்கு அறிவித்திருந்தாலும் அவர்கள் தொழில் ஆணையாளருக்கு சமர்ப்பித்திருந்த விண்ணப்பப்படிவத்தில் முரண்பட்ட விடயமொன்று குறிப்பிடப்பட்டிருந்தது என்பதாகும்.
“தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் உற்பத்திக்கிரயம் அதிகம் என்பதால் மூடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் விண்ணப்பப்படிவத்தில் கேள்வி இல்லாமை காரணமாக மூடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. அவை தொடர்பில் சட்டரீதியான எதிர்ப்பைப் பதிவு செய்ய நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.”
தொழிற்சாலையை மூடுவது பற்றி முன்கூட்டிய அறிவிப்பு எதுவுமின்றி மே 19 ஆம் திகதி இரவு தனது ஊழியர்களுக்கு வாட்ஸ் ஆப் ஊடாக தகவல் அறிவித்ததன் பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் சேவையை முடிவுறுத்துமாறு கோரி நெக்ஸ்ட் நிர்வாகம் மே 20 ஆம் திகதி தொழில் ஆணையாளருக்கு விண்ணப்பமொன்றை அனுப்பியிருந்தது.
அமைச்சருடனான கலந்துரையாடல்
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள ‘நெக்ஸ்ட்’ ஆடைத்தொழிற்சாலையை திடீரென மே 19 ஆம் திகதி மூடியமை தொடர்பில் மே 27 ஆம் திகதி பிரதி தொழில் அமைச்சர் மகிந்த ஜயசிங்க அந்த ஆடைத்தொழிற்சாலையின் நிர்வாகம், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் அதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடலையும் நடத்தினார்.
சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொதுச்சேவை தொழிற்சங்கத்தின் இணைச்செயலாளர் அன்டன் மார்க்கஸ் மீண்டும் ஆடைத்தொழிற்சாலையைதிறந்து தொழிலாளர்களுக்கு தொழில் வழங்குவது தொடர்பில் தொழிற்சாலை நிர்வாகத்தினர் எந்தவிதமான ஆர்வமும் காட்டவில்லை எனக் கூறுகிறார்.
“தொழிற்சங்கங்கள் என்ற வகையில் வலியுறுத்திய விடயமாவது, ஊழியர்களுக்குத் தேவையானது நட்ட ஈடு அல்ல; மாறாக, தொழிற்சாலையைத் மீளத்திறந்து மீண்டும் தொழில்வாய்ப்பைப் பெறுவதே என்பதாகும். அவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே நெக்ஸ்ட் நிர்வாகத்தின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் அவர்களது முகாமைத்துவப் பணிப்பாளர், மனைதவள முகாமையாளர் மற்றும் சட்டத்தரணி ஆகியோர் பங்கேற்றனர். நான் தொழிற்சாலையை மீளத்திறந்து தொழில்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயன்றோம். ஆனால் நிறுவனம் வேறொரு கருத்தைக் கொண்டுள்ளது. அவர்கள் மீளத்திறப்பது குறித்து பேசுவதற்கே தயாராக இல்லை.”
நட்ட ஈடு வழங்குவது தொடர்பில் தொழில் ஆணையாளரின் முன்மொழிவுகள் கிடைப்பதற்கு முன்னதாகவே நெக்ஸ்ட் ஆடைத்தொழிற்சாலையின் நிர்வாகம் ஊழியர்களுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கு மேற்கொண்ட தீர்மானம் பற்றியும் அன்றைய தினம் அமைச்சருக்கு அறியத்தந்ததாகவும் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் குறிப்பிட்டார்.