இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி, லீட்ஸ் நகரில் ஜூன் 20ஆம் திகதி துவங்கிய முதல் போட்டியில் டாஸ் தோற்று, முதலில் களமிறங்கியது.
இதில், இந்தியா 471 ரன்களை எடுத்ததுடன், அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, ரிசப் பண்ட் 134, கேப்டன் 147 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4, ஜோஸ் டாங் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
அடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி 365 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஒலி போப் 106, ஹரி ப்ரூக் 99, பென் டக்கெட் 62 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணியின் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
6 ரன்கள் முன்னிலையுடன், விளையாடிய இந்திய அணிக்கு சாய் சுதர்சன் 30, ரிஷப் பண்ட் 118, கேஎல் ராகுல் 137 ரன்களை குவித்த போதும், பின்வரிசை விரர்கள் சொதப்பியதால், இந்தியா 400 ரன்கள் அடிக்கும் வாய்ப்பைத் தவற விட்டது.
இங்கிலாந்து அணியின், ஜோஸ் டாங் 3, பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்த நிலையில், 371 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராவ்லி 65 ரன்கள் அடித்து அசத்தினார். பென் டக்கெட் 149 ரன்கள் விளாசினார்.
கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 33 ரன்னில் ஜடேஜா சுழலில் சிக்க, அடுத்ததாக வந்த ஜேமி ஸ்மித் சிறப்பாக விளையாடி 44* ரன்கள் எடுத்தார். அவருடன் ஜோ ரூட் 53* ரன்கள் எடுத்ததால் இங்கிலாந்து 373/5 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, இந்த தொடரில் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
அத்துடன், 148 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியை சந்தித்த முதல் அணி என்ற வரலாறு காணாத மோசமான உலக சாதனை தோல்வியை இந்தியா பெற்றுள்ளது.
இந்தியாவின் தோல்விக்கு பேட்டிங்கில் நன்றாக ஃபினிஷிங் செய்யத் தவறியதும் ஃபீல்டிங்களில் ஜெய்ஸ்வால், ஜடேஜா, ரிஷப் பண்ட் ஆகியோர் கேட்சுகளை தவற விட்டமையும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.