இலங்கையின் பிரதான அரச வங்கிக் கிளையொன்றின் பிரதம காசளர் ஒருவர், பாரியளவு வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச வங்கியொன்றின் கடுவலை கிளையில் பணியாற்றும் பிரதான காசளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கியில் இருந்த 13.5 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட தொகையை தவறான வகையில் பல்வேறு கணக்குகளில் இந்த நபர் வைப்புச் செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபருக்கு ஒரு இளம் பெண் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு, வங்கியில் பணம் வைப்பிலிட்டால், தினசரி 10% வட்டி வழங்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.
இதனை நம்பிய அவர், முதலில் 30,000 ரூபாவினை, குறித்த பெண் வழங்கிய கணக்கில் வைப்புச் செய்துள்ளார்.
சில மணி நேரங்களுக்குள் குறித்த காசளரின் கணக்கில் 33000 ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.
இத்துடன், பிரதான காசாளராக பணியாற்றிய அவர், வங்கியின் உள்ளக கணக்குகளில் இருந்து ஒரே நாளில் 13.51 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட தொகையை அந்த பெண் வழங்கிய பல்வேறு கணக்குகளில் வைப்பிலிட்டுள்ளார்.
அவர் வங்கியின் அதிகாரத்தை பயன்படுத்தி பணங்களை முறையற்ற வகையில் தனது கணக்குக்கு பரிமாற்றம் செய்து கொண்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இத்தொகையிலிருந்து 8 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட தொகை அவரது சொந்த வங்கி கணக்கில் வைப்பிலிட்டுள்ளார்.
அதனை அவர் தனது அலைபேசி வங்கி செயலியில் பல்வேறு கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 30 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுடன் குறித்த நபர் வங்கியில் பத்தாண்டுகள் சேவை அனுபவம் உடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபரின் மனைவியும் அதே வங்கியின் வேறு கிளையொன்றில் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முறையான நாளாந்த பணம் சரிபார்ப்பு செய்யும் வேளையில் பெரிய அளவில் பணம் குறைவடைந்திருந்ததனை அவதானிக்க வங்கிய முகாமையாளர் இது குறித்து கடுவல காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து பணம் வைப்புச் செய்யப்பட்ட பல ரசீதுகளையும் மீட்டுள்ளனர்.