காலியில் நேற்று (17) ஆரம்பமான பங்களாதேஷுடனான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முதல் ஒரு மணி நேர ஆட்டம் இலங்கைக்கு சொந்தமானதாக அமைந்தது.
போட்டியின் அந்த முதல் ஒரு மணிநேரத்தில் இலங்கை அணியானது பங்களாதேஷின் மூன்று விக்கெட்டுகளை 45 ஓட்டங்களுக்குள் வீழ்த்தியிருந்தது.
ஆனால் அதன் பின்னர், நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் சதம் அடித்த நிலையில் இணைப்பாட்டமாக 247 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதால் போட்டியில் பங்களாதேஷின் ஆதிக்கம் நீடித்தது.
இவர்களின் வலுவான பங்களிப்புடன் முதல் நாள் ஆட்ட முடிவில் பங்களாதேஷ் 90 ஓவர்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் 292 ஓட்டங்களை பெற்றது.
இந்த இன்னிங்ஸில் 97 போட்டிகளில் பங்கேற்ற பங்களாதேஷ கிரிக்கெட் வரலாற்றில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முஷ்பிகுர், சரியான நேரத்தில் சதம் அடித்து தனது விமர்சகர்களை அமைதிப்படுத்தினார்.
13 இன்னிங்ஸ்களில் அரைசதம் கூட அடிக்காமல் மோசமான நிலையில் இருந்த அனுபவ வீரருக்கு இதுவொரு பெறுமதிவாய்ந்த சதமாக மாறியது.
ஆட்ட நேர முடிவில், சாண்டோ 136 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முஷ்பிகுர் 105 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை பந்து வீச்சாளர்களில் மிலன் ரத்நாயக்க 12 ஓவர்கள் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 19 ஓட்டங்களை மாத்திரம் வழங்கியிருந்தார்.
எனினும், அவரால் விக்கெட்டுகள் எதையும் வீழ்த்த முடியவில்லை.
அதேநேரம், அறிமுக வீரர் தரிந்து ரத்நாயக்க 2 விக்கெட்டுகளையும், அசிதா பெர்னாண்டோ ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.
அஞ்சலோ மெத்தியூஸுக்கு கெளரவம்
போட்டி தொடங்குவதற்கு முன்பு ஓய்வு பெறும் ஜாம்பவான் அஞ்சலோ மெத்தியூஸை கெளரவிப்பதற்காக போட்டியாளர்கள் ஆடுகளத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டனர்.
38 வயதான மெத்தியூஸ், தனது 119 ஆவது மற்றும் இறதி டெஸ்டில் விளையாடுகிறார்.
இலங்கையின் அனைத்து நேர தரவரிசையில் குமார் சங்கக்காரா மற்றும் மஹேலா ஜெயவர்தனே ஆகியோருக்குப் பின்னால் 8,000 ஓட்டங்களுக்கு மேல் தனது காலடியை அவர் பதித்துள்ளார்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு பேசிய மெத்தியூஸ்,
ஒரு அற்புதமான பயணத்தை நடத்தியதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.
அதில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி.
நான் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளேன்.
இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறேன்.
நாட்டிற்காக விளையாடுவது எனது கனவு; அது நனவாகியுள்ளது – என்றார்.
2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்தப் போட்டி முதல் போட்டியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.