உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனினும், இதுவரை போரை நிறுத்தும் முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை.
3 ஆண்டுகளாக போர் நீடித்து வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷியா மீது மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியது.
குறிப்பாக ரஷியாவுக்குள் பல்லாயிரம் கி.மீ. தொலைவுக்கு உள்ளே சென்று டிரோன்களை வீசி காட்டியது உக்ரைன். கன்டெய்னர் லாரிகள் மூலம் ரஷிய பிராந்தியத்துக்குள் டிரோன்களை கொண்டு சென்று அந்த நாட்டு விமானப்படை தளங்களை உக்ரைன் தாக்குதல் நடத்தியது.
இதில் பல்வேறு விமானப்படை தளங்களில் நிறுத்தப்பட்டிருந்த 41 போர் விமானங்கள் முற்றிலும் தகர்க்கப்பட்டன. இதனால் ரஷியா கடும் கோபம் அடைந்தது.
இந்த தாக்குதல் நடைபெற்ற மூன்று தினங்களில் மற்றொரு தாக்குதலையும் உக்ரைன் நடத்தியுள்ளது. உக்ரைனில் இருந்து கிரிமியா நகரை இணைக்கும் கடல் பாலத்தின் தூண் மீது வெடிபொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தியது.
உக்ரைனின் அடுத்தடுத்த தாக்குதல்களால் கடும் கோபம் அடைந்துள்ள புதின், தக்க பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பேசினார். இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக தனது ட்ரூத் வலைத்தளத்தில் டொனால்டு டிரம்ப் பதிவிட்டு இருப்பதாவது: -
“விளாடிமிர் புதினுடன் சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் பேசினேன். ரஷிய விமான தளங்கள் மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதித்தோம்.
உக்ரைனின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்போவதாக ரஷ்ய அதிபர் கூறியுள்ளார். அதனால் இரு தரப்புக்கும் இடையே தற்போதைக்கு போர் நிறுத்தம் ஏற்பட சாத்தியமில்லை” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.