என் இதயம் பெங்களூருவுடன் உள்ளது – விராட் கோலியின் உருக்கமான பதிவு!

இந்தியன் பிரீமியர் லீக் பட்டத்திற்கான நீண்ட மற்றும் வேதனையான காத்திருப்புக்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) முற்றுப்புள்ளி வைத்த பின்னர் விராட் கோலி ஒரு மனமார்ந்த குறிப்பை பகிர்ந்துள்ளார்.

2025 ஜூன் 03 ஆம் திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை ஆறு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி RCB 2025 ஐ.பி.எல். 2025 கிண்ணத்தை வென்றது.

அண்மையில் ஒரு அணிக்காக டி:20 அரங்கில் 9000 ஓட்டங்களை எடுத்த முதல் துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்ற கோலி, அனைத்து ஏற்ற தாழ்வுகளிலும் அணிக்கு ஆதரவாக நின்ற ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டதிலிருந்து ஐ.பி.எல் வரலாற்றில் ஒரே ஒரு அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே வீரர் இவர்தான்.

மலேசியாவில் நடந்த யு19 உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு தலைவராக இருந்து கிண்ணத்தை வென்ற பின்னர் கோலி RCB அணியில் இணைந்தார்.

இந்த நிலையில் தற்போதைய வெற்றியின் பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் விராட் கோலி,

“இந்த அணி அந்தக் கனவை சாத்தியமாக்கியது, நான் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு சீசன் இது. கடந்த 2.5 மாதங்களாக நாங்கள் எங்கள் பயணத்தை முழுமையாக ரசித்தோம். மோசமான காலங்களில் ஒருபோதும் எங்கள் அணியை விட்டு வெளியேறாத RCB ரசிகர்களுக்கானது இந்த வெற்றி. இது அனைத்து வருட மனவேதனைகள் மற்றும் ஏமாற்றங்களுக்கானது” என்று பதவிட்டுள்ளார்.

அதேநேரம் வெற்றியின் பின்னர் நேற்றிரவு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பேசிய அவர்.

“இந்த வெற்றி ரசிகர்களுக்கும் அணிக்கும் முக்கியமானது.

கடந்த 18 நீண்ட ஆண்டுகளாக RCB அணிக்கு எனது இளமை, எனது அனுபவத்தை அளித்துள்ளேன்.
ஒவ்வொரு ஆண்டும் கிண்ணத்தை வெல்ல முயற்சித்தேன்.

என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துள்ளேன்.

இறுதியாக இந்த தருணம் வந்துவிட்டது.

இது ஒரு நம்பமுடியாத உணர்வு.

இந்த நாள் என வாழ்வில் வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

கடைசி பந்து வீசப்பட்டவுடன் என்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒரு ஐ.பி.எல். கிண்ணத்தை வெல்வது ஒரு அற்புதமான உணர்வு.

இந்த அணிக்காக ஏபி டி வில்லியர்ஸ் செய்தது மிகவும் மகத்தானது.

இன்றைய போட்டி தொடங்கும் முன்பு இது எங்களுடையது போலவே உங்களுடையதும் என்று நான் அவரிடம் சொன்னேன்.

ஏனென்றால் அவர் RCB அணிக்காக செய்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

பெங்களூரு அணிக்கு அவர் செய்த சாதனைகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

இன்றிரவு (நேற்றிரவு) நாங்கள் அனைவரும் கிண்ணத்தை உயர்த்தும்போது அவர் அந்த மேடையில் இருக்க தகுதியானவர்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் சொன்னது போல், கடந்த 18 ஆண்டுகளாக எனக்கு இருந்த அனைத்தையும் நான் கொடுத்துள்ளேன்.

எதுவாக இருந்தாலும் இந்த அணிக்கு நான் விசுவாசமாக இருந்து வருகிறேன்.

அனைவருடனும் சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என்று நான் எப்போதும் கனவு கண்டேன், இது வேறு யாருடனும் சேர்ந்து வெற்றி பெறுவதை விட மிகவும் சிறப்பு வாய்ந்தது.

ஏனென்றால் என் இதயம் பெங்களூருவுடன் உள்ளது, என் ஆன்மா பெங்களூருவுடன் உள்ளது, நான் சொன்னது போல் நான் ஐபிஎல் விளையாடும் கடைசி நாள் வரை நான் விளையாடப் போகும் அணி இதுதான்.

ஒரு விளையாட்டு வீரராக நீங்கள் எதையாவது முயற்சிக்கும் போது உங்களுக்குத் தெரியும், இது மிகவும் தீவிரமான மற்றும் உயர்தர போட்டியாகும்.

இது இன்றைய உலக கிரிக்கெட்டில் மிகவும் மதிப்புமிக்கது, நான் பெரிய போட்டிகளை, பெரிய தருணங்களை வெல்ல விரும்பும் ஒருவர்.

இன்றிரவு, நான் ஒரு குழந்தையைப் போல தூங்கப் போகிறேன். இந்த விளையாட்டை விளையாட எனக்கு பல வருடங்கள் இல்லை.

எனவே, எங்கள் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஒரு முடிவு உள்ளது.

இந்த வெற்றிக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இன்றிரவு இறுதியாக அதை என் மடியில் கொடுத்ததற்காக கடவுளுக்கு மிகவும் நன்றி கூறுகிறேன்.

என்னால் முடிந்தவரை கடினமாக உழைத்தேன்.

RCB அணி சிறப்பாக செயல்பட்டிருக்கிறது.

சரியான வீரர்களையும், மேட்ச்-வின்னர்களையும், ஆட்டத்தை எடுத்துச் செல்லும் நபர்களையும் பெற்றுள்ளனர்.

இந்த அணிக்கு ஒரு பெரிய பாராட்டு தெரிவிக்க விரும்புகிறேன்.

அணியில் உள்ள ஒவ்வொருவரும் இல்லாமல், விளையாடும் பதினொருவர் இல்லாமல் இது சாத்தியமில்லை.

நான் இங்கே நின்று என்னைப் பற்றி பேச விரும்பவில்லை. என்னைப் பற்றி ஏற்கனவே நிறைய பேசப்படுகிறது, இந்த வெற்றி பெங்களூருக்கும், வீரர்கள், குடும்பங்கள் மற்றும் நிர்வாகத்திற்கும் உரியது.

இந்த தருணம் எனது வாழ்க்கையில் நான் பெற்ற சிறந்த தருணங்களுடன் சரியாக உள்ளது – என்றார்.

2025 ஐபிஎல் போட்டியில் RCB அணி சாம்பியன் பட்டம் வெல்ல விராட் கோலி முக்கிய பங்கு வகித்தார்.

15 போட்டிகளில் 54.75 சராசரி மற்றும் 144.71 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 657 ஓட்டங்களை குவித்து, அணியின் முன்னணி ஓட்ட குவிப்பாளராக அவர் இடம் பிடித்தார்.

இந்த சீசனில் அவரது அதிகபட்ச ஓட்டம் – ஆட்டமிழக்காமல் 73 – ஏப்ரல் மாதம் முல்லன்பூரில் பஞ்சாப்புக்கு எதிராக பெறப்பட்டது.

இறுதிப் போட்டியில், கோலி 35 பந்துகளில் 43 ஓட்டங்களை எடுத்து, பஞ்சாப் அணிக்கு எதிரான RCB இன் ஆறு ஓட்ட வித்தியாச வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!