இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் தலைமையிலான இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராஜதந்திரக் குழுவினருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ (Carmen Moreno), ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிராந்தியத் தலைவர் சார்ள்ஸ் வைட்லே, ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் துணைத் தலைவர் லார்ஸ் பிரெடெல், உள்ளிட்டவர்கள் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இங்கு, இரு தரப்பினரும் நாட்டின் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து விரிவாகக் கவனம் செலுத்தினர். மேலும், GSP+ சலுகையை மேலும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கையின் ஆடைகள் உட்பட ஏற்றுமதிப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக சந்தை வாய்ப்புகளைப் பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்தார். நாட்டின் ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கவும், அமெரிக்கா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு விதிக்கப்படும் 44% பரஸ்பர வரியின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் இதனால் முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் காவிந்த ஜயவர்தன, எஸ்.எம்.மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் மற்றும் பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம, பேராசிரியர் கெணடி குணவர்தன, பேராசிரியர் திருமதி சந்திமா விஜேகுணவர்தன, கலாநிதி மஹிம் மெண்டிஸ், கலாநிதி அதுலசிறி சமரகோன், கலாநிதி நதீஷா டி சில்வா, சுரங்க ரணசிங்க, குசும் விஜேதிலக மற்றும் திலும் அழகியவன்ன ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.