இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ். தோனி ஐ.சி.சி. ஹால் பேமில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜூன் 9 திங்கள் கிழமை ஐ.சி.சி. இந்தப் பட்டியலை வெளியிட்டபோது, இந்த மதிப்புமிக்க கௌரவத்தைப் பெற்ற ஏழு பேரில் தோனியும் ஒருவர்.
இதன் மூலமாக புகழ்பெற்ற விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான தோனி, விளையாட்டுக்கு தனது விலைமதிப்பற்ற பங்களிப்பிற்காக ஐ.சி.சி. ஹால் பேமில் நுழைந்த 11 ஆவது இந்தியர் ஆனார்.
விளையாட்டின் பல ஜாம்பவான்களுடன் தனது பெயர் இணைக்கப்பட்டது மிகப்பெரிய மரியாதை என்று தோனி கூறியுள்ளார்.
2004 டிசம்பர் 23 ஆம் திகதி பங்களாதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோனி சர்வதேச அளவில் அறிமுகமானார்.
தனது முதல் பந்திலேயே ரன் அவுட் ஆனதால், அவரது கிரிக்கெட் வாழ்க்கை மோசமான தொடக்கத்தை அடைந்தது.
இருப்பினும், விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது ஐந்தாவது போட்டியில் தோனி 148 ஓட்டங்கள் எடுத்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அன்றிலிருந்து, மூன்று வடிவங்களிலும் தனது மகத்தான சாதனைகளால் அணியில் உறுதியான இடத்தை அவர் பிடித்தார்.
டோனி சிறிது நேரத்திலேயே அணியின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார்.
அவரது தலைவர் பதவிக் காலத்தில் இந்திய கிரிக்கெட்டை முன்னெப்போதும் இல்லாத உயரத்திற்குக் கொண்டு சென்றார்.
2007 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கிண்ணத்தில் ஒரு இளம் அணியை சாம்பியன் பட்டத்திற்கு அழைத்துச் சென்று, 2011 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 91* (79) ஓட்டங்கள் எடுத்து நாட்டின் 28 ஆண்டுகால ஒருநாள் உலகக் கிண்ண காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தோனியின் காலத்தில், இந்தியா 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றது, அனைத்து ஐசிசி கிண்ணங்களையும் வென்ற முதல் மற்றும் ஒரே தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
608 இன்னிங்ஸ்களில் 634 பிடியெடுப்புகள், 195 ஸ்டம்பிங்குகள் உட்பட 829 ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் வரலாற்றில் மூன்றாவது வெற்றிகரமான விக்கெட் காப்பாளராகவும் உள்ளார்.