18 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று (03) இடம்பெற்றது. இப்போட்டியில் றோயல் சேலெஞ்சர்ஸ் பெங்களுரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, RCB அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி – சோல்ட் களமிறங்கினர். விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சோல்ட் அதிரடியாக விளையாடி 9 பந்துகளில் 16 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மயங்க் அகர்வால் 24, பட்டிதார் 26 என ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடி வந்த விராட், அதிரடியாக ஆட ஆரம்பித்தார். அதற்குள் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 35 பந்துகளில் 43 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்திருந்தார்.
இதனையடுத்து லிவிங்ஸ்டன் – ஜித்தேஷ் சர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 2 சிக்சர்கள் விளாசிய லிவிங்ஸ்டன் 25 ஓட்டங்களிலும், 2 பவுண்டரி 2 சிக்ஸர் விளாசிய ஜித்தேஸ் 10 பந்துகளில் 24 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் RCB அணி 20 ஓவர்களில் 190 ஓட்டங்களை எடுத்தது. இதைத்தொடர்ந்து 191 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாம் அணி திறமையுடன் விளையாடியது. பஞ்சாபின் தொடக்க வீரர்களான பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா களம் இறங்கினர்.
இதில் பிரியன்ஷ் ஆர்யா 24 ஓட்டங்களிலும், பிரப்சிம்ரன் சிங் 26 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தார்கள். தொடர்ந்து களத்திற்கு வந்த இங்கிலிஸ் அதிரடியாக ஆடினார். அவர் 39 ஓட்டங்களிலும், அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 1 ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து இளம் வீரர்களான நேஹல் வதேரா மற்றும் ஷஷாங் சிங் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தனர். இதில் வதேரா 15 ஓட்டங்களிலும், அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 6 ஓட்டங்களிலும், ஓமர்சாய் 1 ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர்.
20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களை மட்டுமே பஞ்சாப் கிங்ஸ் அணியால் எடுக்க முடிந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்காக ஷஷாங் சிங் இறுதி வரை போராடினார். அவர் 30 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பெற்றார்.
இறுதியில் RCB 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்டகால ஏக்கம் தீர்ந்துள்ளது.
6