ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த 10 பங்களாதேஷ் பிரஜைகள் குழு, நேற்யை தினம் (24) கட்டுநாயக்கவின் ஆண்டியம்பலம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்ட இவர்கள் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
குடிவரவு அதிகாரிகளின் கூற்றுப்படி, இவர்கள் அனைவரும் பெப்ரவரியில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்திருந்தனர்.
வருகை விசா முறையின் கீழ் பெறப்பட்ட சுற்றுலா விசாக்களில் அவர்கள் இலங்கைக்குள் நுழைந்தனர்.
ஆனால், அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு அப்பால் அவர்கள் நாட்டில் தங்கியிருந்தனர்.
அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணைகளில், இந்தக் குழு இலங்கையில் இருந்து துபாய்க்குப் பயணம் செய்து, பின்னர் எகிப்துக்குள் நுழைந்து, இறுதியில் மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவை அடைய முயற்சித்ததாக தெரியவந்துள்ளது.
எவ்வாறெனினும், தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ள இந்தக் குழு வெலிசரா தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின்படி, நாடுகடத்தல் நடவடிக்கைகள் முடியும் வரை அவர்கள் தடுப்புக் இருப்பார்கள் என்று குடிவரவு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.