காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றவர்கள் சாலையோரத்தில் கடைகளை வைத்து நடத்துவதற்காக மாநகராட்சி மூலம் வாங்கப்பட்ட ஆயத்த கடைகள் பயன்படுத்தப்பாடமல் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மழையிலும், வெயிலிலும் போட்டு வைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் நகராட்சி கடந்த 2022-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த மாநகராட்சி மூலம் சாலையோரத்தில் உடல் ஊனமுற்றோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் போன்றோர் கடை வைப்பதற்கும், அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் 50 ஆயத்த கடைகள் வாங்கப்பட்டன. தாம்பரம் மாநகராட்சிக்கு அரசு மூலம் வழங்கப்பட்ட இந்த கடைகளில் மிகுதியாக இருந்தவை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு எடுத்து வரப்பட்டன.
இரும்பால் செய்யப்பட்ட இந்த கடைகளை சாலையோரங்களில் வைத்து பயன்படுத்தும் வகையில் உள்ளன. இந்த கடைகளை வழங்குவதற்காக முதல்கட்டமாக 25 பயனாளிகள் தேர்வு நடைபெற்றது ஆனால் இந்த நடவடிக்கைகள் ஓராண்டை கடந்த நிலையில் கடைகள் இன்னும் யாருக்கும் ஒப்படைக்கப்படவில்லை.
முதலில் இந்த 50 கடைகளும் காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் வைக்கப்பட்டிருந்தன. ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும்போது பலர் அங்கு தங்கியதால் அங்கிருந்த கடைகள் தற்போது காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் உத்திரமேரூர் பேரூந்துகள் நிற்கும் இடத்துக்கு அருகே வைக்கப்பட்டுள்ளன. கழிவறைக்கு அருகே இந்த கடைகளை வைத்திருந்தப்பது பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. மழையிலும், வெயிலிலும் இருப்பதால் கடைகள் வீணாகி வருகின்றன.
இது குறித்து சமூக ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, உண்மையில் இந்த ஆயத்த கடைகள் வழங்கும் திட்டம் நல்ல திட்டம். இதன் மூலம் வருமானம் இல்லாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த கடைகள் வழங்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. திட்டங்களை சரியாக வகுத்து முறையாக செயல்படுத்தவில்லை. இந்த கடைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் பேருந்து நிலையம் அருகே வைத்து வீணாகி வருகின்றன. உடனடியாக இந்த கடைகளை சரியான பயனாளிகளை தேர்வு செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி தலைமை பொறியாளர் கணேஷிடம் கேட்டபோது இது குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி நிதி பிரிவில்தான் கேட்க வேண்டும். கடைகளை விரைவில் பயனாளிகளுக்கு வழங்க அவர்களிடம் தெரிவிக்கிறேன் என்றார். இது குறித்து நிதிப் பிரிவு அதிகாரியிடம் கேட்டபோது அந்த கடைகளை பல ஆண்டுகளாக அப்படியே வைத்துள்ளனர். அதனை மாநகராட்சி கவுன்சிலிடம் உரிய அனுமதி பெற்று பயனாளிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.