‘சிபில் ஸ்கோர்’ பிரச்சினையை தீர்க்க… – சு.வெங்கடேசன் எம்.பி முன்வைக்கும் யோசனை | MP Su Venkatesan opinion to solve the CIBIL Score Problems

மதுரை: ‘சிபில் ஸ்கோர்’ முறையில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க, கடன் வாங்குபவர்களின் மதிப்பெண்களை ரிசர்வ் வங்கி தீர்மானிக்க வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிபில் ஸ்கோரை தீர்மானிப்பது சிபில் டிரான்ஸ் யூனியன் என்ற அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட பன்னாட்டு நிறுவனம். இந்நிறுவனம் 60 கோடி இந்தியர்கள், 2.5 கோடி சிறு, குறு நிறுவனங்களின் கடன் பெறும் தகுதியை தீர்மானிக்கிறது. சிபிலின் நடைமுறை வெளிப்படைத்தன்மை அற்றது. உயர்வான மதிப்பெண் பெற பல்வேறு நடைமுறைப்படுத்த முடியாத நிபந்தனைகளை விதிக்கிறது.

ஒரு தவணை தவறினாலும் சிபில் ஸ்கோர் குறையும். சமரச ஒப்பந்தம் போட்டு சிறிது அளவு வட்டி சலுகை உடன் கடனை அடைத்தாலும் சிபில் ஸ்கோர் குறைகிறது. கடன் அட்டைகளில் 30 சதவீதத்திற்கு மேல் பயன்படுத்தினால் சிபில் ஸ்கோர் குறையும். எது கூடுதலான சலுகை உள்ள வங்கி என தெரிந்து கொள்ள ஒருவர் இரண்டு, மூன்று வங்கிகளில் கடனுக்காக விண்ணப்பித்தால் சிபில் ஸ்கோர் குறையும்.

சிபில் ஸ்கோர் குறைந்தது 300, அதிகம் என்பது 900. ஆனால், கடனே வாங்காதவருக்கு மைனஸ் ஒன்று பூஜ்யம் என ஸ்கோர் வரும். அப்படியே அவருக்கு கடன் கிடைத்தாலும் வட்டி அதிகம். கடன் வாங்கியவரின் சிபில் ஸ்கோர் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப வட்டி மாறும். பெரும்பாலான கடனாளிகளின் வட்டி கூடுதலாகும். 800 என்பது தான் ஆகச் சிறந்த ஸ்கோர். இதை பெரும்பாலானவர்களால் அடையவே முடியாது.

கல்விக் கடன் பெற மாணவர்களும், பெற்றோர்களும் அடிப்படையாக பலநேரம் இருப்பது சிபில் ஸ்கோர். கடனே வாங்காத நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கியதாக சிபில் ஸ்கோர் வருகிறது. அதை நேர் செய்வது கடினம். சிபிலின் நடைமுறையே கேள்விக்குறிய ஒரு விஷயம். இது எதுவும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கிடையாது. வேண்டுமென்றே பணத்தை திருப்பிக் கட்டாத கடனை, தள்ளுபடி போக ஏதோ ஒரு தொகை, செலுத்தினாலும், ஓராண்டுக்கு பிறகு அவருக்கு மீண்டும் கடன் கிடைக்கும்.

கடந்த 2002 வரை ரிசர்வ் வங்கி தான் கடன் வாங்குபவர்களின் மதிப்பெண்களை தீர்மானித்து வந்தது. அதற்குப் பிறகு தான் சிபில் உள்ளே நுழைந்தது. சிபில் என்பது ஒரு பாரபட்சமான நடைமுறை. இது ஏழை மக்களுக்கு அரசு நிறுவனங்களில் இருந்து கடன் கிடைப்பதை தடுக்கும் ஒரு செயல் முறை. இதை கையாள்வது பன்னாட்டு கம்பெனி.

கடன் மதிப்பெண்களை சிபில் என்ற பன்னாட்டு நிறுவனம் தீர்மானிப்பதை கைவிடவேண்டும். முன்பு இருந்தது போல் ரிசர்வ் வங்கியே வெளிப்படை தன்மையோடு கடன் வாங்குபவர்களின் மதிப்பெண்களை தீர்மானிக்கவும், அதிலுள்ள குறைகளை எளிதாக தீர்க்கவும் வழிவகை செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!