ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் 32ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் அபிஷேக் போரல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக தொடங்கியதுடன் முதல் விக்கெட்டிற்கு 34 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஃபிரேசர் மெக்குர்க் 9 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் கருண் நாயரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
இதனால் அந்த அணி 34 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த அபிஷேக் போரல் மற்றும் கேஎல் ராகுல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுல் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் போரல் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 49 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் – அக்ஸர் படேல் ஆகியோரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அக்ஸர் படேல் 4 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களையும், அஷுதோஷ் சர்மா 15 ரன்களையும் சேர்க்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கி இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களைச் சேர்த்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்ப, அடுத்து களமிறங்கிய ரியான் பராக்கும் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
அவர்களைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் – நிதிஷ் ரானா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அரைசதத்தை பூர்த்தி செய்த நிலையில், 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 51 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மறுப்பக்கம் அரைசதம் கடந்து அசத்திய நிதீஷ் ரானாவும் 6 பவுண்ட்ரி, 2 சிக்ஸர்கள் என 51 ரன்களுடன் நடையைக் கட்ட, ராஜஸ்தான் அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 23 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
அதன்படி 19ஆவது ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 ரன்களைச் சேர்த்ததன் காரணமாக கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது. இறுதியில் மிட்செல் ஸ்டார்க் அபாரமான பந்துவீசியதுடன் அந்த ஓவரில் 8 ரன்களை மட்டுமே கொடுத்தார்.
இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் இப்போட்டியானது டையில் முடிவடைந்தது. இதனையடுத்து இப்போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்ததுடன் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்து 11 ரன்களை மட்டுமே சேர்த்தது.
பின்னர் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 4 பந்துகளில் இலக்கை எட்டியதுடன் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை பிடித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெறுங்கள் – நியூஸ்21 WhatsApp குழுவில் இணையுங்கள்!
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள
News21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்!