(எம்.ஆர்.எம்.வசீம்,இரா.ஹஷான்)
உயர்நீதிமன்ற நீதியரசராக மொஹமட் லபாரின் பெயரை ஜனாதிபதி பரிந்துரைத்தபோது ஏன் அந்த பரிந்துரையை மீளப்பெற வேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடு வெறுக்கத்தக்கது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அத்துடன், கொழும்பு மாநகர சபையை சூழ்ச்சியினால் இந்த அரசாங்கம் கைப்பற்றியுள்ளது. இது முஸ்லிம் சமூகத்துக்கு இழைத்த பிறிதொரு அநீதியாகும் எனவும் அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற வெளிநாட்டு தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்று அங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்தல் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, கடந்த ஆட்சியாளர்களின் விளையாட்டை இந்த அரசாங்கம் மெல்ல மெல்ல ஆரம்பித்துள்ளது.
மேல் நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் பந்துல கருணாரத்னவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுனில் வட்டகல குறிப்பிட்டார். ஆனால் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அந்த கருத்து முழுமையாக மறக்கடிக்கப்பட்டு நீதியரசர் பந்துல கருணாரத்னவுக்கு முழுமையான ஓய்வூதிய விடுமுறை வழங்கப்பட்டது.
மேல் நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் மொஹமட் லபார் நியமிக்கப்பட்டார். 2024 டிசம்பர் மாதமளவில் உயர்நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு 15 வெற்றிடங்கள் காணப்பட்ட நிலையில் மொஹமட் லபாரை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கும் இயலுமை காணப்பட்டது,
கடந்த வெள்ளிக்கிழமை அரசியலமைப்பு பேரவை கூடியது. இதன்போது உயர்நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு மொஹமட் லபாரின் பெயரை ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார். ஆனால் இந்த பரிந்துரையை சபை முதல்வரான பிமல் ரத்நாயக்க மீளப்பெற்றுக்கொண்டுள்ளார். உயர்நீதிமன்ற நீதியரசராக மொஹமட் லபாரின் பெயரை ஜனாதிபதி பரிந்துரைத்த போது ஏன் அந்த பரிந்துரையை மீளப்பெற வேண்டும்.
மேல் நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லபார் நேற்று சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஒரு நாள் பதவியில் இருப்பதற்காகவாவது அவரை உயர்நீதிமன்ற நீதியரசராக நியமித்திருக்க வேண்டும். அரசாங்கத்தின் இந்த செயற்பாடு வெறுக்கத்தக்கது.
இந்த அரசாங்கம் முஸ்லிம் சமூகத்துக்கு பாரியதொரு அநீதியை இழைத்துள்ளது. இந்த அமைச்சரவையில் தான் முஸ்லிம் பிரதிநிதிகள் எவருமில்லை. ஆனால் முஸ்லிம் மக்களின் வாக்குகளை முழுமையாக பெற்றுக்கொண்டார்கள். கொழும்பு மாநகர சபையை சூழ்ச்சியினால் இந்த அரசாங்கம் கைப்பற்றியுள்ளது. இது முஸ்லிம் சமூகத்துக்கு இழைத்த பிறிதொரு அநீதியாகும் என்றார்.- Vidivelli