பஞ்சாப் – பெங்களூரு இடையிலான போட்டி இன்று! – Athavan News

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (29) நடைபெறும் குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தப் போட்டியானது இன்றிரவு 07.30 மணிக்கு சண்டிகர், முல்லன்பூரில் அமைந்துள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகும்.

இரு அணிகளும் தங்கள் முதல் ஐ.பி.எல். பட்டத்தை இலக்கு வைத்து இந்த ஆட்டத்தில் களம் காணுகின்றன.

மேலும், இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக ஜூன் 3 ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் விளையாடும்.

அதேநேரத்தில், இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி நாளை நடைபெறும் வெளியேற்றல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இறுதிப் போட்டிக்கான பந்தயத்துக்காக ஜூன் 01 ஆம் திகதி நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் களம் காணும்.

இரு அணிகளுமே வலுவான துடுப்பாட்ட வரிசைகளைக் கொண்டுள்ளன, அதே நேரத்தில் நிலையான பந்துவீச்சு வரிசையும் இதில் அடங்கும்.

பஞ்சாப் இதுவரை ஒரு முறை மட்டுமே ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது, அது 2014 ஆம் ஆண்டு.

அந்த ஆண்டு, அவர்கள் குவாலிஃபையர் 1 ஐ கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் தோற்றனர், ஆனால் குவாலிஃபையர் 2 ஐ வென்று இறுதிப் போட்டிக்கு வந்தனர்.

இருப்பினும், அவர்கள் KKR அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தனர்.

மறுபுறம், பெங்களூரு அணி இதுவரை மூன்று முறை ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு முன்னேறி அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது.

2009 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடமும், 2011 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமும் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது.

2016 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடமும் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது.

ஐ.பி.எல். வரலாற்றில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் இதுவரை 35 ஐ.பி.எல். போட்டிகளில் மோதியுள்ளன.

RCB 18 போட்டிகளிலும், PBKS 17 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

Image

நன்றி

Leave a Reply

error: Content is protected !!