பல ஐரோப்பிய நாடுகளில்இன்று திடீரென மிகப் பெரிய மின்தடை ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகளில்இவ்வாறு மின்சார சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல கோடி மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். ஐரோப்பிய வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய மின்வெட்டாக இது இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளில் மொபைல் சேவை மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளும் முடங்கியுள்ளன. இதனால் பணம் எடுப்பது முதல் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்வது வரை எதையும் மக்களால் செய்ய முடியவில்லை.
ஸ்பெயின் நாட்டில் மின்வெட்டு காரணமாக மாட்ரிட்டின் பராஜாஸ் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பல விமான நிலையங்களின் செயல்பாடுகள் மொத்தமாகவும் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், பல பகுதிகளில் புகையிரதங்கள் சுரங்கப் பாதைகளில் சிக்கிக் கொண்டதாகவும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் புகையிரதங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பல முக்கிய நகரங்களில் போக்குவரத்து சிக்னல்கள் கூட செயல்படாமல் நிலைமை மிக மோசமாகப் போய்க் கொண்டு இருக்கும் சூழலில் ஸ்பெயின் அரசு அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
இந்த பொிய மின்வெட்டுக்க்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், அப்பகுதிகளில் நிலவும் அதீத வானிலையே மின்வெட்டுக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
அங்கு ஏற்பட்ட திடீர் தீவிர வெப்ப மாறுபாடுகள் ஓர் அரிதான வளிமண்டல நிகழ்வை உருவாக்கியுள்ளதாகவும் அதுவே மின்வெட்டுக்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், தென்மேற்கு பிரான்சில் உள்ள அலரிக் மலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது பெர்பிக்னான் மற்றும் கிழக்கு நார்போன் இடையேயான உயர் மின்னழுத்த கேபிளை சேதப்படுத்தியுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பவர் கிரிட்டில் ஏற்பட்ட பாதிப்பு கூட மின்வெட்டு காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
மின்வெட்டைச் சரி செய்யும் பணிகளில் பல்வேறு ஊழியர்களும் இறங்கியுள்ளனர். பவர் இணைப்பில் எங்குப் பாதிப்பு என்பதைக் கண்டறிந்து, அதைச் சரி செய்யும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், மின்சாரம் சப்ளை சீராக 7 முதல் 8 மணி நேரம் வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது.