2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (24) நடைபெறும் 42 ஆவது போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியானது, ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியை எதிர்கொள்ளவுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 42 ஆவது போட்டியானது பெங்களூருவில் அமைந்துள்ள எம் சின்னசாமி மைதானத்தில் இன்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமாகும்.
இந்த சீசனில் இதுவரை இரு அணிகளும் முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களை கொண்டிருந்தன.
ரஜத் பட்டிதர் தலைமையிலான RCB அணியானது தொடரில் சந்தித்த எட்டு போட்டிகளில் ஐந்து வெற்றிகள் மற்றும் மூன்று தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அதேநேரம், ரியான் பராக் தலைமையிலான RR அணியானது தொடரில் சந்தித்த எட்டு போட்டிகளில் ஆறு தோல்விகள் மற்றும் இரண்டு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.
RR-ன் பார்வையில் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் அவர்கள் இந்த ஆட்டத்தில் தோற்றால், இந்த சீசனில் 16 புள்ளிகளைப் பெறும் வாய்ப்பை இழப்பார்கள்.
இது 2025 ஐ.பி.எல். பிளேஆஃப்களுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பினை இல்லாது ஆக்கும்.
இருப்பினும், இந்த சீசனில் சொந்த சின்னசாமி மைதானத்தில் ஒரு ஆட்டத்திலும் கூட வெற்றி பெறாத RCB அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும் நம்பிக்கையில் RR அணியின் தலைவர் ரியான் பராக் உள்ளார்.
அதேநேரம், இந்த சீசனில் சொந்த மண்ணில் முதல் வெற்றியை RCB அணி இன்னும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
கடைசி போட்டியில் பஞ்சாப் கிங்ஸை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மன உறுதியுடன் இன்று களம் இறங்குகிறது.
ஐ.பி.எல். வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
அதில் RCB அணியானது 16 வெற்றிகளையும், RR அணியானது 14 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
மூன்று போட்டிகள் எதுவித முடிவின்றி கைவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.