புதுடெல்லி: பாதுகாப்புத் துறைக்கு தேவையான பாதுகாப்பு கவச வாகனங்கள், ஆயுதங்கள் உற்பத்தியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது ஆயுதங்கள் உற்பத்தியை விரிவுபடுத்த பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 9 விதமான தொழில்நுட்பங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டிஆர்டிஓ) கடந்த சனிக்கிழமை வழங்கியது.
தரையில் இருந்து இயக்கப்படும் பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் சிபிஆர்என் (ரசாயனம், உயிரி, கதிர்வீச்சு, அணுசக்தி) கண்காணிப்பு வாகனங்கள், பாதுகாப்பு கவச வாகனங்கள் உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்பங்கள் பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.
தொழில்நுட்பங்களுக்கான லைசென்ஸ் ஆவணங்களை மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் பகுதியில் டிஆர்டிஓ கீழ் செயல்படும் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் (விஆர்டிஇ) கடந்த சனிக்கிழமை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கியது. பொதுத் துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ், (பெல்), தனியார் நிறுவனமான பாரத் போர்ஜ், மெட்டல்டெக் மோட்டார் பாடிஸ் பிரைவேட் லிமிடெட் உட்பட பல்வேறு நிறுவனங்களுக்கு தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.