போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து 14வது பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீகாந்த் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை அடுத்து, அவருக்கு முதல் வகுப்பு சிறையில் அடைக்க நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் ஏற்பட்ட மோதலில் அதிமுக பிரமுகர் பிரசாத், அஜய் வாண்டையார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், இவர்கள் கொக்கைன் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் கைதான அதிமுக பிரமுகர் பிரசாத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், இவர்களுக்கு கொக்கைன் சப்ளை செய்ததாக கயானாவைச் சேர்ந்த ஜான் என்பவர் ஓசூரில் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, கைதான ஜானிடம் யார் யாருக்கு போதைப் பொருள் சப்ளை செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், பிரபல சினிமா நடிகர் ஸ்ரீகாந்த் பெயர் அடிபட்டது. இதனை அடுத்து, நுங்கம்பாக்கம் போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என கூறினார்.
ஆனால், போதைப் பொருள் சப்ளை செய்ததாக ஜான் குறிப்பிட்டிருந்தது குறித்து போலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பியது. இதனை அடுத்து, போலீசார் ஸ்ரீகாந்துக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில், ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.
அவரிடம் நுங்கம்பாக்கம் போலீசார் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மூன்று போதைப்பொருள் சப்ளை செய்தவர்களிடம் ஸ்ரீகாந்த் தொடர்பில் இருந்ததாக போலீசார் கூறினர்.
இந்த கொக்கைன் போதைபொருளை பெங்களூருவில் இருந்து அந்த கிராமுக்கு ரூ.7,000க்கு வாங்கி, அதை சென்னையில் ரூ.12,000க்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதில், ஸ்ரீகாந்த் 40 முறை போதைப் பொருள் வாங்கி உள்ளதாகவும், டீலர் பிரதீப்பிற்கு ரூ.4.72 லட்சம் பண பரிவர்த்தனை செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த போதைப் பொருள் வழக்கில் ஸ்ரீகாந்தின் பெயர் மூன்றாவதாக சேர்க்கப்பட்டுள்ளது.