ஆடைத்தொழில்சாலைக்கு வேலைக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முற்பட்ட பெண்ணான தாய் ஒருவருக்கு பின்னால் சென்ற 3 வயது ஆண் குழந்தை மீது பேருந்து மோதியதில் குழந்தை பரிதபகராமக உயிரிழந்துள்ளது.
இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (30) பிற்பகல் 1.30 மணியளவில் மட்டக்களப்பு ஆரையம்பதி காளிகோவில் வீதியில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
ஆரையம்பதி முதலாம் பிரிவு காளிகோவில் வீதியைச் சேர்ந்த 3 வயதுடைய பிரகாஷ் றிகோஸ்வரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த வீதியைச்சேர்ந்த தாயார் ஆரையம்பதியிலுள்ள ஆடைத்தொழில்சாலையில் வேலைபார்த்துவரும் நிலையில் சம்பவதினமான இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கம்பனி பேருந்தில் வேலைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வந்து பேருந்தில் ஏற முற்பட்டபோது தாய்க்கு பின்னால் வந்த குழந்தை பஸ்வண்டி ரயரினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குழந்தையின் சடலத்தை ஆரையம்பதி வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.