மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரை | Question paper leak issue at Manonmaniyam Sundaranar University

திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி பரிந்துரை செய்துள்ளார்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெறவிருந்த பி.காம். பட்டப் படிப்புக்கான தொழிற்சாலை சட்டம் (இன்டஸ்ரியல் லா ) என்ற பாடத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று நடக்கவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, மே 30-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது.

வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு, நெல்லை பேட்டை காவல் நிலையத்தில், பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரட்டீஸ் புகார் அளித்தார். அதனடிப்படையில் பேட்டை போலீஸார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற, மாநகர காவல் துறை ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி பரிந்துரை செய்துள்ளார்.

சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட 99 கல்லூரிகளில் தேர்வு நடைபெற்றுள்ளதாலும், தேர்வு நடைபெற்ற கல்லூரிகள் அமைந்துள்ள 4 மாவட்டங்களிலும் விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!