“மாணவர்கள், கர்ப்பிணிகளை தவிர்த்திடுக” – மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு காவல் துறை விதித்த 52 நிபந்தனைகள் என்ன? | Police impose 52 conditions on Madurai Murugan devotees conference

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளை காவல் துறை விதித்துள்ளது. மேலும், முன்கூட்டியே மேற்கொள்ளும் ஏற்பாடுகளை நிறைவேற்றி, அதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்து முன்னணி சார்பில் வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு பந்தல், மேடை அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடக்கின்றன. மேலும், முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்படுகின்றன.

இந்த மாநாட்டுக்கான அனுமதி கேட்டு மாநாட்டுப் பொறுப்பாளர்கள், மதுரை மாநகர காவல் துறையை அணுகினர். லட்சக்கணக்கானோர் கூடும் நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக 52 நிபந்தனைகளை விதித்து, அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது; இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களைச் சேர்ந்தோரும் பங்கேற்க வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு வண்ண நிறத்தில் அனுமதி அட்டைகள் வழங்க வேண்டும். தனித்தனி வாகன நிறுத்துமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

முக்கியப் பிரமுகர்கள், மேடையில் பங்கேற்போருக்கென பிரத்யேகமாக பார்க்கும் வசதிகளை உருவாக்க வேண்டும். போதிய வழிகளை அமைக்க வேண்டும். ஒவ்வொரு வழியிலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் பரிசோதனை செய்த பிறகே பக்தர்களை அனுமதிக்க வேண்டும். கழிப்பறைகள், மருத்துவக் குழுக்கள், அவசர வாகனங்கள், குடிநீர் தொட்டிகளை ஏற்படுத்த வேண்டும்.

மாநாட்டு மேடை மற்றும் நுழைவாயில் உள்ளிட்ட பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, கண்காணிக்க வேண்டும். மாநாட்டுக்கு வரும் வாகனங்களை, அதற்கான இடங்களில் நிறுத்தி,

தன்னார்வலர்களைக் கொண்டு கண்காணிக்க வேண்டும். வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து எத்தனை வாகனங்கள் வருகின்றன என்ற பட்டியலை வழங்க வேண்டும். மீட்பு வாகனங்களுக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

மாநாட்டு நடக்கும் இடத்துக்கு மாநகராட்சியிடம் இருந்து முறையான அனுமதியைப் பெற வேண்டும். மாநாட்டுப் பகுதியில் வழங்கும் உணவுகளுக்கு, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கர்ப்பிணிகள், முதியோரைத் தவிர்க்க வேண்டும்.

மாநாட்டுத் திடலில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை அமைக்க அறநிலையத் துறை அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறவேண்டும். ரிங்ரோடு என்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தாமல், காவல் துறையினருடன் ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட 52 நிபந்தனைகளை விதித்துள்ளோம்.

இவற்றில் முன்கூட்டியே மேற்கொள்ளும் பணிகளை நிறைவேற்றி, அதற்கான விவரங்களை காவல் துறையிடம் வரும் 18-ம் தேதிக்குள் அறிக்கையாகச் சமர்ப்பிக்கவேண்டும். இது தொடர்பாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்களிடம் தெரிவித்துள்ளோம். மக்களின் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை கருதியே இது ன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினார்.

பூஜை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுத் திடலில் அறுபடை வீடுகள் அமைக்க அனுமதி மறுத்து போலீஸார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், மாநாட்டுக்கு அனுமதி வழங்கவும் கோரி இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி பி.புகழேந்தி முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மாதிரி அறுபடை வீடுகளுக்கு 3 நாட்களுக்கு அனுமதி வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்து முன்னணி தரப்பில், ‘போலீஸார் விதித்த 52 நிபந்தனைகளில் மாநாட்டுக்கு பைக்கில் வரக்கூடாது, வாகனங்களில் வர உள்ளூர் காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட 6 நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் சிரமங்கள் உள்ளதால், அவற்றை மாற்றியமைக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது: மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அனுமதிமறுத்து போலீஸார் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மாநாட்டு வளாகத்தில் மாதிரி அறுபடை வீடுகள் அமைத்து, பூஜை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. மாநாடு நடைபெறும் இடத்தில் உரிமையாளரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஏற்கெனவே பல கட்சிகளின் மாநாடுகள் நடந்துள்ளன. எனவே, மாநாடு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

போலீஸாரின் 6 நிபந்தனைகளுக்கு மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 2 ட்ரோன்கள் பறக்கலாம். மாநாடு செல்வதற்கான வாகன அனுமதி கேட்டு மனு அளித்தால் 24 மணி நேரத்தில் போலீஸார் முடிவு எடுக்க வேண்டும். ஆன்மிக நிகழ்ச்சியை அரசியல் நிகழ்வாக முன்னெடுக்காமல், நிபந்தனைகளை பின்பற்றி மாநாட்டை நடத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!