போர்க் கப்பலொன்று சோதனையோட்டத்தின் போது சரிந்து விழுந்த சம்பவம் தொடர்பில் குறித்த போர்க் கப்பலின் தயாரிப்பில் ஈடுபட்ட முக்கிய அதிகாரிகளை கைது செய்யுமாறு வடகொரிய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வட கொரியாவின் சோங்ஜின் நகரில் அமைந்துள்ள முக்கியமான போர் கப்பல் தயாரிக்கும் தொழிற்சாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
சம்பவ தினத்தன்று சுமார் 5,000 தொன் எடை கொண்ட குறித்த கப்பலை சோதனையோட்டத்திற்காக கடலுக்குள் விட்டபோது அது திடீரென ஒரு பக்கமாக சாய்ந்துள்ளதோடு அதன் அடிப்பகுதி சேதமடைந்துள்ளதாகவும், இதனால் கடல்நீர் அக்கப்பலுக்குள் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த கப்பல் வடிவமைப்புத் தலைவர்,கட்டுமானத் துறைத் தலைவர் மற்றும் நிர்வாகத் துணை மேலாளர் ஆகியோரைக் கைது செய்யுமாறு அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜொங்-உன் (Kim Jong-un) உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த 3 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள தொழிலாளர் கட்சியின் முக்கியக் கூட்டத்திற்கு முன்பாக குறித்த கப்பல் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் தயாராக இருக்க வேண்டும் என்ற உத்தரவையும் கிம் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.