பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக சேறுபூசும் கருத்துக்கள் மற்றும் பாரபட்சமான கருத்துக்களை வெளியிட்டு, அந்த கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசிய சுயதொழில் வியாபாரிகள் சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் அங்கத்தவருமான பிரதீப் சார்ல்ஸ் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (13) நிபந்தனைக்குட்பட்ட தடை உத்தரவைப் பிறப்பித்தார்.
2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரிவு 24 இன் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தாக்கல் செய்த முறைப்பாட்டை பரிசீலித்த பின்னரே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பிரதீப் சார்லஸ், யூடியூப் சேனல் உரிமையாளர்களான நதீஷ அமரநாத், துஷாரா செவ்வந்தி ஆகியோருடன் கூகிள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களும் பெயரிடப்பட்டுள்ளன.
மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி லக்ஷன் டயஸ், பெயர் குறிப்பிடப்பட்டுள்ள முதலாவது பிரதிவாதி தீவிர அரசியல்வாதி செயற்பாட்டாளர் என்றும், அவர் தொடர்ந்து மனுதாரர் தொடர்பாக ஊடகங்களுக்கு அவதூறான மற்றும் பாரபட்சமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தொடர்புடைய கருத்துக்கள் அடங்கிய பதிவை யூடியூப் வழியாக இணையத்தில் பதிவேற்றுவதைத் தடுக்கும் விதமாக ஏனைய பிரதிவாதிகளுக்கும் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கருத்தில் கொண்டு, தலைமை நீதவான் நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவை இன்று பிறப்பித்ததோடு, எதிர்வரும் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.