யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானம் மட்டும் அல்ல சர்வதேச தரத்தில் உள்ளக விளையாட்டரங்கும் அமைக்கப்படவுள்ளது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,
‘வடக்கு, கிழக்கில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தவதற்கரிய திட்டங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் வகுத்துள்ளார். இது விடயத்தில் அவர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்.அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் அடிக்கடி யாழ்.மாவட்டத்துக்கு வருகின்றனர். விளையாட்டு கழகங்களைச் சந்தித்து கலந்துரையாடுகின்றனர்: குறைகளை கேட்டறிந்து – அவற்றை தீர்த்து வைக்கின்றனர்.
யாழ்ப்பாணத்துக்கே உரிய தனித்துவமான சர்வதேச மைதானத்தை ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் அமைத்து, அங்கு சர்வதேச போட்டியையும் நடத்துவோம். கடந்த 76 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாத வடக்கு, கிழக்கு விளையாட்டுத்துறை பற்றி தற்போது புதிய கோணத்தில் சிந்திக்கப்படுகின்றது.
யாழில் உள்ளக விளையாட்டு அரங்கும், பயிற்சி நிலையமும் அமைக்கப்படவுள்ளது. வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் மற்றும் அங்கு வாழும் இளைஞர்களின் விளையாட்டு ஆற்றலை இனங்காண்பதற்கு கடந்தகாலங்களில் அவதானம் செலுத்தப்படவில்லை என தெரிவித்தார்.