மட்டக்களப்பு – விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 55 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘விளாவூர் யுத்தம்’ எனும் தொனிப்பொருளில் நடத்திய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் மகுடம் சூடியுள்ளது.
கடந்த 12ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில் விளாவட்டவான் ராஜா விளையாட்டு மைதானத்தில் பகல்- இரவு போட்டியாக நடைபெற்ற குறித்த சுற்றுப் போட்டியில் 25 அணிகள் களம் கண்டிருந்தது.
இதில் முனைக்காடு இராமகிருஸ்ணா அணியும், காஞ்சிரங்குடா நாக ஒளி அணியும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிருந்தது.
இந்நிலையில் 01:00 என்ற கோல் கணக்கால் முனைக்காடு இராமகிருஸ்ணா வெற்றி பெற்று ராஜாவின் மரகத விழா கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில் இரண்டாம் இடத்தினை காஞ்சிரங்குடா நாக ஒளி அணியும்,மூன்றாம் இடத்தினை முதலைக்குடா விநாயகர் அணியும் பெற்றுக்கொண்டது.
குறித்த போட்டியில் ராஜாவின் மரகத விழா நாயகனாக காஞ்சிரங்குடா நாக ஒளி அணியின் பந்து காப்பாளர் தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன் சிறந்த பந்துக் காப்பாளராக முனைக்காடு இராமகிருஸ்ணா அணியின் பந்துக் காப்பாளர் த.தனுஜனும், சிறந்த பின்கள வீரராக முதலைக்குடா விநாயகர் அணியின் வீரர் சி.விதுசனும், அதிக கோல்களை உட்செலுத்திய வீரராக கரையாக்கன்தீவு காந்தி அணி வீரர் டிலக்சனும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணம் மற்றும் பணப்பரிசு வழங்கப்பட்டது. ராஜா விளையாட்டுக் கழக தலைவர் இ.அபிலாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செ.சண்முகராஜா, படுவான்கரை உதைபந்தாட்ட சங்கத்தின் பொருளாதார் ந.மணிவண்ணன், விளாவட்டவான் விநாயகர் வித்தியாலய அதிபர், விளாவட்டவான் ஆலய நிருவாக சபையின் பிரதிநிதிகள், பொது அமைப்பினர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.