இன்று எல்லாம் இணையமயமாகிவிட்டது. இணையம் வழியாக நல்லது பலவும் நடந்தாலும், கெட்டதும் அதிகம் நடைபெறுகின்றன. இணையக் குற்றங்கள் அதற்குப் பாதை அமைத்துக் கொடுத்திருக்கின்றன.
இணையக் குற்றங்கள் பல வகைகளிலும் நடக்கின்றன. அதில் இணையதளம் மூலம் திருமணத்துக்கு வரன் தேடுவோரும் இணையக் குற்றங்களுக்கு ஆளாகி வருகின்றனர். திருமணத்துக்கு வரன் தேடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த ஓர் இளைஞரின் கதை இது.
பெங்களூருவைச் சேர்ந்த ராஜ்குமார் ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்து ஆனவர். பெரிய நிறுவனத்தில் மேலாளர் பணியில் இருந்த அவரை இரண்டாம் திருமணம் செய்ய சொல்லி வீட்டில் பெற்றோர் வற்புறுத்தினர். திருமணத்துக்குச் சம்மதித்தவர், திருமணத்துக்கு வரன் தேடும் இணையதளத்தில் பதிவுசெய்தார். ஒரு வாரம் கழித்து ஒரு பெண் வரன் இணையதளம் மூலம் அவரை அணுகியிருந்தார்.
அந்தப் பெண்ணின் விவரங்களைப் பார்த்த ராஜ்குமாருக்கு அவரை மிகவும் பிடித்துப்போனது. மேற்கொண்டு பேசுவதற்காக விசாகப்பட்டினத்தில் வசிக்கும் அந்தப் பெண் தொடர்பான விவரத்தில் வழங்கப்பட்டிருந்த கைபேசி எண்ணில் ராஜ்குமார் தொடர்புக்கொண்டார்.
அந்த எண்ணில் ஒரு பெண் குரல் கேட்டது. பேசிய பிறகுதான், அந்தப் பெண்தான் வரன் என்பது ராஜ்குமாருக்கு தெரியவந்தது. பெண்ணுடன் நேரடியாகப் பேச வாய்ப்பு கிடைத்ததால், சில விவரங்களைக் கேட்டுவிட்டு ராஜ்குமார் கைபேசியை வைத்துவிட்டார்.
பிறகு அந்தப் பெண் ராஜ்குமாரை அழைத்துப் பேச, இப்படியே மாறிமாறி பேசியதில் இருவருக்கும் மிகவும் பிடித்து போய்விட்டது. வீட்டில் பெரியவர்கள் யாரும் பேசிக்கொள்ளாமலேயே கைபேசியில் பேசி இவர்களே திருமணம் குறித்தெல்லாம் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படிப் பேசும்போது ராஜ்குமார் தன்னுடைய சேமிப்புப் பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறார்.
முதலீட்டு ஆலோசனை: நம்முடைய எதிர்காலம் நன்றாக இருக்க, பணத்தை வங்கியில் சேமித்து வைக்காமல், முதலீடு செய்து பணத்தை பெருக்கும்படி அப்பெண் யோசனை கொடுத்திருக்கிறார். அதற்காக ஒரு முதலீட்டு செயலியின் லிங்கையும் அனுப்பியிருக்கிறார். முதலில் தயங்கிய ராஜ்குமாரை, கைபேசியில் மணிக்கணக்கில் பேசி அவர் சம்மதிக்க வைத்திருக்கிறார்.
முதலில் ரூ. 5 லட்சம் முதலீடு செய்த ராஜ்குமாருக்கு எடுத்த எடுப்பிலேயே திருப்திகரமான லாபம் கிடைத்திருக்கிறது. அதை நம்பி அடுத்தடுத்த மாதங்களில் மேலும் பணத்தை முதலீடு செய்தபடி இருந்தார், ராஜ்குமார். இப்படியாக ரூ.90 லட்சம் வரை முதலீடு செய்ததற்குப் பிறகுதான் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்கத்தில் முதலீட்டுக்கு ஏற்ற பணம் அவருக்குக் கிடைத்த நிலையில், பிறகு பணம் வரவில்லை. ஒரு கட்டத்தில் அந்தச் செயலியே செயல்பாட்டில் இல்லாமல் போனது. அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார், இந்தச் செயலியை அறிமுகப்படுத்திய வருங்கால மனைவியை அழைத்திருக்கிறார்.
அந்த கைபேசி எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மனம் தளராமல் திருமணத் தகவல் விவரத்தில் இருந்த முகவரியை எடுத்துக்கொண்டு விசாகப்பட்டினம் சென்றார் ராஜ்குமார். குறிப்பிட்ட முகவரியில் அப்படி யாரும் இல்லை என்பதும் ராஜ்குமாருக்கு தெரியவந்தது. பிறகுதான் திருமண வலை விரித்து அந்தப் பெண் தன்னை ஏமாற்றியிருக்கிறார் என்பது அவருக்குப் புரிந்தது. அதன்பிறகு சைபர் குற்றப் பிரிவில் புகார் அளித்துவிட்டு மன வேதனையோடு அவர் பெங்களூரு திரும்பினார்.
என்ன நடந்தது? – சைபர் குற்றத்தில் ஈடுபடுவோர் தற்போது திருமணத்தளங்களையும் விட்டுவைக்க வில்லை. அதில் போலிக் கணக்கு களை உருவாக்கி வரன் தேடும் நபர்களைக் குறிவைக்கிறார்கள். பின்னர் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசி, நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். பிணைப்பு ஏற்பட்டவுடன், அவர்களுடைய பணம், சேமிப்பு விவரங்களை அறிந்து மோசடியில் சிக்க வைக்கின்றனர்.
எனவே, திருமணத் தளங்களோ அல்லது மற்ற இணையதளங்கள் மூலமோ அறிமுகமாகும் நபர்களின் பின்னணியை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலும் வீடியோ அழைப்புகள், நேரடி சந்திப்புகளை அவர்கள் தவிர்ப்பார்கள் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும் இணையதளம் மூலம் அறிமுகமானவர் வழங்கும் முதலீட்டு ஆலோசனையை ஏற்றுக்கொள்ளாதீர்கள். அதிலும் குறுகிய காலத்தில் அதிக வருமானம் வரும் என்று அவர்கள் உறுதியளித்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்நியர்களுடன் வாட்ஸ்அப் அல்லது மற்ற செயலிகள் வழியே தனிப்பட்ட, நிதி சார்ந்த தகவல்களைப் பகிர வேண்டாம். இப்படியான அழைப்புகளில் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக சைபர் குற்றத் தடுப்புப் பிரிவினரை 1930 எண்ணில் அழைத்து புகார்களைப் பதிவு செய்துவிடுங்கள்.
(வெளியேற வழி காண்போம்)