வாட்டர் ஆப்பிள் சாகுபடியில் ஆர்வம் காட்டும் ஓசூர் விவசாயிகள்! | farmers show interest in water apple cultivation in Hosur

ஓசூர்: ஓசூர் பகுதியில் நிலவும் மிதமான சீதோஷ்ண நிலையால், வாட்டர் ஆப்பிள் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், இச்சாகுபடிக்கு தேவையான உரியத் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நல்ல மண் வளம் மற்றும் ஆண்டு முழுவதும் நிலவும் மிதமான குளிர்ந்த சீதோஷ்ண நிலை மலர் மற்றும் காய்கறி சாகுபடிக்கு விவசாயிகளுக்குக் கைகொடுத்து வருகிறது. அதேபோல மலைப்பிரதேசங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களும் இப்பகுதியில் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், தேன்கனிக்கோட்டை, பாலூர், உரிகம், தளி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் மிதமான சீதோஷ்ண நிலையை அடிப்படையாக கொண்டு, பன்னீர் ஆப்பிள் என்று அழைக்கப்படும் வாட்டர் ஆப்பிள் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், இப்பகுதிகளில் வெள்ளை, பச்சை, இளஞ்சிவப்பு, மஞ்சள் ஆகிய 4 வண்ணங்களில் வாட்டர் ஆப்பிள் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை செய்யப்பட்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும், இங்கு அறுவடையாகும் வாட்டர் ஆப்பிள்கள் தமிழகத்தில் முக்கிய நகரப் பகுதிகள் மற்றும் கர்நாடக மாநிலத்துக்கும் விற்பனைக்குச் செல்கிறது. இதனிடையில், ஓசூர் பகுதி விவசாயிகளுக்கு வாட்டர் ஆப்பிள் சாகுபடி குறித்த தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் சந்தை வாய்ப்பு தொடர்பான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: மிதமான சீதோஷ்ண நிலை நிலவும் பகுதியில் சாகுபடி செய்யப்படும் வாட்டர் ஆப்பிளை ஓசூர் பகுதிகளிலும் சாகுபடி செய்ய முடிவு செய்து, கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து மரக்கன்றுகளை வாங்கி வந்து நடவு செய்தோம். 2 ஆண்டுகளில் நன்கு வளர்ந்து மகசூல் கொடுத்து வருகிறது. ஒரு மரத்தில் 50 கிலோ முதல் 100 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது.

ஆண்டுக்கு 3 முறை அறுவடை செய்கிறோம். உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது. இப்பழம் பொதுவாக 90 சதவீதம் நீர்ச்சத்தும், மருத்துவ குணமும் நிறைந்தது. இதில், சிவப்பு நிற வாட்டர் ஆப்பிள் சுவையாகவும், அதிக மருத்துவ குணம் உள்ளதாலும் கிலோ ரூ.150 வரை விற்பனையாகிறது. இதைச் சிறு வியாபாரிகள் நேரடியாகக் கொள்முதல் செய்து வருகின்றனர்.

மேலும், வாட்டர் ஆப்பிள் மரங்களை வளர்த்து, பராமரிக்க அதிக நேரம் செலவிடத் தேவையில்லை. அதேபோல, பராமரிப்புச் செலவும் குறைவு தான். ஓசூர் பகுதியில் நிலவும் மிதமான சீதோஷ்ண நிலை வாட்டர் ஆப்பிள் மரங்கள் நன்கு வளர்கின்றன. இதன் சாகுபடி முறை குறித்து விவசாயிகளுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே, தோட்டக்கலைத் துறை மூலம் சாகுபடி தொழில்நுட்பங்கள், சந்தை வாய்ப்பு தொடர்பான உரிய வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!