விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

 

கடந்த மாதம் மானிப்பாயில் ஒரு தேவாலயத்தில் நடந்த ஒரு மக்கள் சந்திப்பில், அங்கு வந்திருந்த உள்ளூராட்சி சபை வேட்பாளர்களும் உட்பட பொதுமக்களிடம் ஒரு கேள்வி கேட்டேன்.” நீங்கள் உள்ளூர் உணர்வுகளின் அடிப்படையில் வாக்களித்தீர்களா? அல்லது தேசிய உணர்வின் அடிப்படையில் வாக்களித்தீர்களா? உங்களுடைய ஊரவர்;உங்களுடைய சாதி ஆள்; உங்களுடைய சமயத்தவர்; உங்களுக்கு நெருக்கமானவர்; உங்களுக்குத் தொண்டு செய்பவர்… என்றெல்லாம் சிந்தித்து வாக்களித்தீர்களா? அல்லது உள்ளூரில் இருந்து தேசியப் பண்புமிக்க, முன்னுதாரணமான தலைவர்களை கட்டியெழுப்பப் போகிறோம் என்று சிந்தித்து வாக்களித்தீர்களா? அவர்கள் சொன்னார்கள் ” நாங்கள் உள்ளூர் பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே வாக்களித்தோம் ” என்று.

அதுதான் உண்மை. இப்பொழுது தெரிவு செய்யப்பட்டிருக்கும் பெரும்பாலான உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அவ்வாறு உள்ளூர் உணர்வுகளின் அடிப்படையில்தான் தெரிவு செய்யப்பட்டார்கள் .இது ஒரு புறமிருக்க, அவர்கள் வேட்பாளர்களாக எப்படி அவர்களுடைய கட்சிகளால் தேர்வு செய்யப்பட்டார்கள் என்று பார்த்தால், அது இன்னும் பயங்கரம். பெரும்பாலான உள்ளூராட்சி சபை வேட்பாளர்கள் மூன்று முக்கிய அளவுகோள்களின் அடிப்படையில் கட்சிகளால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

முதலாவது அளவுகோல், அவர் கட்சித் தலைமைக்கு விசுவாசமானவராக இருக்க வேண்டும். இரண்டாவது அளவுகோல், அவருக்கு உள்ளூரில் தனது வட்டாரத்தில் செல்வாக்கு அதிகமாக இருக்க வேண்டும். அதாவது தேர்தலில் வெல்லக்கூடியவராக இருக்க வேண்டும். மூன்றாவது அளவுகோல், பெண் வேட்பாளர்.

இந்த மூன்று அளவுகோள்களிலும் முதலாவதே முக்கியமானது.கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இல்லாத யாரையுமே கட்சிகள் வேட்பாளர்களாக நிறுத்துவதில்லை. தலைமையைக் கேள்வி கேட்பவர், தலைமைக்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்… போன்ற யாரையுமே கட்சிகள் வேட்பாளர்களாகத் தெரிவு செய்வதில்லை.

எனவே இப்பொழுது மிகச் தெளிவான ஒரு சித்திரம் கிடைக்கிறது. விசுவாசமும், உள்ளூர்ச் செல்வாக்கும்தான் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை பெருமளவுக்கு தீர்மானிக்கின்றன. குறிப்பாக பெண் வேட்பாளர்களின் விடையத்தில் எந்த ஒரு கட்சியிடமும் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மகளிர் அமைப்பு கிடையாது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆர்ப்பாட்டங்களில் ஒரு பெண் உறுப்பினர் அனேகமாக காணப்படுவார். மற்றும்படி ஏனைய கட்சிகளின் மேடைகளில் பெண்களைக் காண்பது குறைவு. கட்சி மேடைகளில் மட்டுமல்ல, பேச்சுவார்த்தை மேடைகளிலும் கட்சித் தலைவர்கள் உடன்படிக்கைகளை எழுதும் மேடைகளிலும், மேசைகளிலும் பெண்களைக் காண முடியாது. அதுமட்டுமல்ல, வெளிநாட்டுப் பிரதிநிதிகளை,தூதரக அதிகாரிகளை சந்திக்கும் மேசைகளிலும் பெண்களைக் காண முடியாது. கட்சிகள் மகளிர் பிரதிநிதித்துவம் தொடர்பாக பேசிய தேசிய விழிப்போடு இல்லை என்பதைத்தான் அது காட்டுகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சட்டம் நிர்ப்பந்திப்பதனால் பெண்களைத் தெரிவு செய்ய வேண்டியுள்ளது.

இப்படிப்பட்டதோர் தமிழ்த் தேசியக் கட்சிச் சூழலில் இப்பொழுது தெரிவு செய்யப்பட்டி க்கும் வேட்பாளர்கள் எந்த தகமைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது அல்லவா ? எனவே வாக்களித்தவர்களும் உள்ளூர் உணர்வுகளின் அடிப்படையில் வாக்களிக்கிறார்கள். வாக்களிக்கப்பட்டவர்களும், விசுவாசம், உள்ளூர்ச் செல்வாக்கு என்பவற்றின் அடிப்படையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் சேர்ந்து எப்படிப்பட்ட உள்ளூராட்சி நிர்வாகத்தை மக்களுக்கு கொடுக்கப் போகிறார்கள்?

இப்படிப்பட்டதோர் பின்னணியில், இப்பொழுது புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இதில் வென்ற கட்சிகளுக்கும் தோல்வியுற்ற கட்சிகளுக்கும் இடையிலான சமூக வலைத்தள மோதல் எனப்படுவது கேவலமான கீழ்மட்டத்தை அடைந்திருக்கிறது. அவர்கள் மோதிக் கொள்ளும் விதம், அதில் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் ,என்பவற்றைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது இவர்களிடம் போய் தேசத் திரட்சியை எதிர்பார்க்கலாமா? என்று விரத்தியுற வேண்டியுள்ளது. இன அழிப்புக்கு உள்ளான மக்கள் ; இப்பொழுதும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் மக்கள் என்று கூறுகிறோம். ஆனால் அழிவிலிருந்தும் தோல்விகளில் இருந்தும் கூட்டுக் காயங்களில் இருந்தும் எதையுமே கற்றுக் கொள்ளவில்லையா ?

கட்சிகளின் விசுவாசிகள் முகநூலில் மோதுவதை பார்த்தால், உள்ளூராட்சி நிர்வாகங்கள் ஸ்திரமாக இருக்காது என்று தோன்றுகிறது. 30க்கும் குறையாத சபைகள் தொங்கு சபைகளாக அமையக்கூடிய வாய்ப்புகள் தெரிகின்றன. எதிர்க் கட்சிகளின் இரக்கத்தில் பெருமளவுக்கு தங்கியிருக்க வேண்டிய ஒரு நிலை. இவ்வாறான ஸ்திரமற்ற நிர்வாகத்தை வைத்துக் கொண்டு எப்படி உள்ளூர் நிர்வாகத்தைக் கட்டி எழுப்புவது? உள்ளூர்த் தலைமையைக் கட்டி எழுப்புவது? உள்ளூர்ப் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவது?

உதாரணமாக, யாழ் மாநகர சபை. தமிழ் மக்களின் பண்பாட்டுத் தலைநகரம் ஒன்றின் தலையாய சபையது. கொழும்பு மாநகர சபையைப் போல. இந்தச் சபையில் யார் முதல்வராக இருக்கிறார் என்பது எல்லோருடைய கவனிப்பையும் பெறக்கூடியது. இந்த சபையில் நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பது எல்லாருடைய கவனிப்பையும் பெறக்கூடியது. தமிழ்த் தேசிய கட்சிகளின் நிர்வாகத் திறனை மதிப்பிடுவதற்கு ஒரு குறிகாட்டியாக இந்தச் சபை பார்க்கப்படும்.

இம்முறை ஒரு பெண் முதல்வராக தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார். அது ஒரு நல்ல முடிவு. இவர் யாழ்.மாநகர சபைக்கு இரண்டாவது பெண் முதல்வர். தமிழரசுக் கட்சி ஒரு பெண்ணை முதல்வராக்கியதைப் பாராட்ட வேண்டும். எனினும் புதிய முதல்வர் தலைமைத்துவ மிடுக்கோடு காணப்படவில்லை. சோர்ந்து போய், எதற்கோ பயந்தவர் போல காணப்படுகிறார். தோற்றத்தை வைத்து முழுமையாக மதிப்பிட முடியாது என்று சிலர் கூறக்கூடும். சில சமயம் அவர் ஒரு சிறந்த நிர்வாகியாக இருக்கலாம். ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால், எப்படிப்பட்ட நிர்வாகியாக இருந்தாலும் ஒரு ஸ்திரமான நிர்வாகத்தை கொண்டு நடத்த தேவையான பெரும்பான்மை அவரிடம் உண்டா?

இப்பொழுது யாழ் மாநகர சபையில் தமிழரசுக் கட்சிக்குள்ள பெரும்பான்மை பலவீனமானது. எதிர்க்கட்சிகளின் இரக்கத்தில் தங்கியிருப்பது. குறிப்பாக நாட்டை ஆளும் தேசிய மக்கள் சக்தியின் முடிவுகளில் அதன் எதிர்காலம் தங்கியிருக்கின்றது. தேசிய மக்கள் சக்தியும் ஏனைய எதிர்க்கட்சிகளும் இணைந்து முடிவெடுத்தால் நிர்வாகத்தைக் குழப்பலாம்.

“நாம் வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தால் இங்குள்ள தமிழ்க் கட்சிகளின் கனவு சிதைக்கப்படும். மனக்கோட்டை, மண்கோட்டையாக மாறிவிடும் என்பதை சொல்லி வைக்க விரும்புகின்றோம்”என்று நேற்று சாவகச்சேரியில் வைத்து அமைச்சர் சந்திரசேகரன் கூறியிருக்கிறார். “…..துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட ;ராஜபக்சக்களின் காலை நக்கி பிழைக்கின்றவர் எனக் கூறப்பட்ட ; மக்களுக்கு எதிராக அராஜாங்களை கட்டவிழ்த்துவிட்டவர்; ஊடகவியலாளர்களைக் கொன்றவர் எனக் குற்றஞ் சாட்டப்பட்டவர்களுடன் கூட்டுச் சேரும் நிலைமை காணப்படுகின்றது. இதனை மக்களும் புரிந்துகொண்டுள்ளனர். மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக அல்ல, தமது காவாலித்தனமான அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இவர்கள் இவ்வாறு ஆட்சியமைக்கின்றனர்….”

தேசிய மக்கள் சக்தி இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சியோடு இல்லை என்று கருதத்தக்க விதத்தில் அமைச்சர் சந்திரசேகரன் கருத்துக் கூறியிருக்கிறார்.ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவை பெற்றதனால்தான் தமிழரசுக் கட்சி யாழ் மாநகர சபையை கைப்பற்ற முடிந்தது என்று அவர் குற்றம் சாட்டுகிறார். எனினும் ஆட்சியை குழப்ப மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்கின்றார். இது எப்பொழுதும் அவர்களுடைய இரக்கத்தில் ஒரு தமிழ்த் தேசிய மாநகர சபை தொங்கிக் கொண்டிருகப் போவதைக் காட்டுகின்றதா?

இப்படித்தான் கிட்டத்தட்ட 30 சபைகளில் நிலைமை இருக்கப் போகின்றது. வவுனியாவில் ஏற்கனவே வீட்டுக்கும் சங்குக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாடு பின்னர் சங்குக்கும் சைக்கிளுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக குழம்பி விட்டது. இதனால்,அங்கே தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. வவுனியா நகர சபை இந்த விடயத்தில் ஒரு குறியீடு எனலாம். தமிழ் தேசிய கட்சிகள் தங்களுக்கு இடையே ஐக்கியப்படவில்லை என்றால் தேசிய மக்கள் சக்திக்குச் சாதகமான ஓர் அரசியல் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என்பதுதான் அது.

உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் சாராம்சமும் அதுதான். ஒன்றுபட்டு ஆட்சி செய்யுங்கள் என்பதே அது. ஒன்றுபடவில்லை என்றால் தேசிய மக்கள் சக்தியை உள்ளே வர விடுவீர்கள் என்பதுதான் அதன் இன்னொரு பொருள்.

ஆனால் தமிழ்த் தேசியக் கட்சிகள் அந்த ஆணையிலிருந்து எதையும் படித்திருப்பதாகத் தெரியவில்லை. சபைகளை உருவாக்கிய பின் கட்சித் தொண்டர்களும் விசுவாசிகளும் சமூக வலைத்தளங்களில் மோதும் காட்சி மிகவும் கீழ்த்தரமாக உள்ளது. முகநூலில் சிதறிக் காணப்படும் ஒரு தேசம்.

இப்படிப்பட்ட ஒரு தேசத்தின் உள்ளூராட்சி சபைகளை இந்தத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமையாக ஆட்சி செய்து, உள்ளூர்ப் பொருளாதாரத்தையும் உள்ளூர்த் தலைமைகளையும் வெற்றிகரமாகக் , கீழிருந்து மேல் நோக்கிக் கட்டி எழுப்புவார்கள் என்று எப்படி எதிர்பார்ப்பது?

 

நன்றி

Leave a Reply

error: Content is protected !!