3-ம் உலகப் போர் மூளும் அபாயம்: அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை | Risk of World War 3: Putin warning to the US

வாஷிங்டன்: இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது.

ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சக்திவாய்ந்த அணு குண்டுகளை தயாரிக்க ஈரான் தீவிர முயற்சி செய்து வருவதாக மேற்கத்திய நாடுகள் நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது 87 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வைத்திருப்பதாகவும் இதை 90 சதவீதம் செறிவூட்டினால் அணு குண்டுகளை தயாரிக்க முடியும் என்றும் சர்வதேச அணு சக்தி நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

இந்த சூழலில் ஈரானின் அணு சக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை கடந்த 13-ம் தேதி திடீர் தாக்குதலை நடத்தியது. கடந்த 7 நாட்களாக இஸ்ரேல், ஈரான் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 20 அணு சக்தி தளங்கள் மிகக் கடுமையாக சேதமடைந்து உள்ளன. மேலும் ஈரானின் 14 அணு சக்தி விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டு உள்ளனர்.

அணு ஆயுத திட்டத்தை ஈரான் கைவிட்டு,சரண் அடைய வேண்டும் என்று அமெரிக்கா திரைமறைவில் வலியுறுத்தி வருகிறது. ஆனால் சரண் அடையும் பேச்சுக்கேஇடமில்லை என்று ஈரான் மதத் தலைவர் அயதுல்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் களமிறங்கினால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சூழலில் சர்வதேச அளவில் இஸ்ரேல், ஈரானுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் அணி திரண்டு வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி,கனடா, ஆஸ்திரேலியா உட்பட மேற்கத்திய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டை பாதியில் ரத்து செய்துவிட்டு அமெரிக்கா திரும்பினார். ஈரான் மீது நேரடியாக போர் தொடுப்பது தொடர்பாக அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “ஈரான் மீது போர் தொடுக்க விரும்பவில்லை. எனினும் ஈரானின் அணு சக்தி திட்டத்தை அழிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நான் என்ன செய்வேன் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்த வாரம் மிகப்பெரிய சம்பவங்கள் நிகழும்” என்று தெரிவித்தார். இது ஈரானுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாக கருதப்படுகிறது.

புளூம்பர்க் ஊடகம் வெளியிட்ட செய்தியில், “அடுத்த சில நாட்களில் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கக்கூடும். இதுதொடர்பாக அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய கிழக்கில் சன்னி, ஷியா முஸ்லிம்களுக்கு இடையே நேரடி மோதல் நிலவுகிறது. அந்த வகையில் சன்னி முஸ்லிம்கள் அதிகம் வாழும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் விவகாரத்தில் மென்மையான போக்கை பின்பற்றி வருகின்றன.

ஈரான் ஆதரவு நாடுகள்: ஈரானுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா,வடகொரியா, வெனிசூலா, ஏமன், லெபனான் உள்ளிட்ட நாடுகள் செயல்படுகின்றன. துருக்கி, அஜர்பைஜான் மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகள் ஈரானுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் எதுவும் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் அணு ஆயுத தாக்குதலை நடத்தினால் பாகிஸ்தான் நேரடியாக போரில் களமிறங்கும். இஸ்ரேல் மீது பாகிஸ்தான் ராணுவம் அணு குண்டுகளை வீசும் என்று ஈரான் ராணுவ மூத்த அதிகாரி மோசென் ரீஸி அண்மையில் கூறினார்.

ஆனால் ஈரானின் கருத்தை பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜாமுகமது ஆசீப் உடனடியாக மறுத்தார்.“ஈரானுக்கு நாங்கள் எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. அணு சக்தி ஒப்பந்தங்களை நாங்கள் கண்டிப்புடன் பின்பற்றுகிறோம். பாகிஸ்தான் மண்ணையும், மக்களையும் காப்பாற்ற மட்டுமே அணு ஆயுதங்களை வைத்திருக்கிறோம்” என்று அவர் விளக்கம் அளித்தார்.

ஈரானுக்கு ரஷ்யா ஆதரவு: உக்ரைனுக்கு எதிரான போரின்போது ரஷ்யாவுக்கு, ஈரான் பல்வேறு வகைகளில் ஆயுத உதவிகளை வழங்கியது. குறிப்பாக ஈரானின் அதிநவீன ட்ரோன்கள் ரஷ்யாவுக்கு வழங்கப்பட்டன. தற்போதைய இக்கட்டான சூழலில் ஈரானுக்கு க்ராசுகா 4 என்ற ஏவுகணை தடுப்பு சாதனத்தை ரஷ்யா வழங்கியிருக்கிறது. இந்த மின்னணு தடுப்பு சாதனம் மூலம் இஸ்ரேலின் அதிநவீன ஏவுகணைகள் நடுவானில் திசை திருப்பப்படுகின்றன. இதன்காரணமாக இஸ்ரேலிய ஏவுகணைகள் மீண்டும் இஸ்ரேலுக்கே திருப்பி சென்று அந்த நாட்டை தாக்குகின்றன. இது இஸ்ரேலுக்கு பேரதிர்ச்சியாக அமைத்திருக்கிறது.

இதனிடையே ரஷ்ய வெளியுறவுத் துறைதுணை அமைச்சர் செர்ஜி ரயாப்கோவ், மாஸ்கோவில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர்தொடுத்தால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறும் போது, “ஈரான், இஸ்ரேல் இடையே போர்நிறுத்தத்தை ஏற்படுத்த சமரச பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது.எங்களது சமரச திட்டத்தை ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் விளக்கி உள்ளோம். ஈரான், ரஷ்யா இடையே பொருளாதார, ராணுவரீதியாக மிக நெருங்கிய உறவு நீடிக்கிறது” என்று தெரிவித்தார்.

ஈரானின் அணு சக்தி தளங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ரஷ்ய நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு எந்த ஆபத்தும் நேரிடக்கூடாது என்று அமெரிக்கா, இஸ்ரேலிடம் ரஷ்யா ஆணித்தரமாக எடுத்துரைத்து உள்ளது.

சீனா எச்சரிக்கை: சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், பெய்ஜிங்கில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் சீனா மிகக் கடுமையாக எதிர்க்கும். சர்வதேச சட்டவிதிகள் மீறப்படுவதை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் அண்மையில் கூறும்போது, “ஈரான், இஸ்ரேல் இடையிலான போரில் அமெரிக்கா தலையிடக்கூடாது” என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். வடஅமெரிக்க நாடான வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுரோ கூறும்போது, “ஈரானுக்கு ரஷ்யா, சீனா, துருக்கி, பெர்சிய வளைகுடா கூட்டமைப்பு கவுன்சில், இஸ்லாமிய நாடுகள், குளோபல் சவுத் நாடுகள் பகிரங்கமாக ஆதரவு அளிக்க வேண்டும். அப்போதுதான் இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

வடகொரியாவில் தீவிர ஆயுத உற்பத்தி: இஸ்ரேல், ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் சூழலில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மிக முக்கிய முடிவை எடுத்து உள்ளார். வடகொரியாவின் ஆயுத உற்பத்தியை பலமடங்கு அதிகரிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரே நேரடியாக ஆயுத ஆலைகளுக்கு சென்று மேற்பார்வை செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் ரஷ்யாவுக்கு சுமார் 20,000 கன்டெய்னர்களில் வடகொரியா ஆயுதங்களை அனுப்பி வைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. இதேபோல வடகொரியா தரப்பில் ஈரானுக்கும் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போதைய சூழலில் இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது. ஒருவேளை உலகப்போர் மூண்டால் பேரழிவு ஏற்படும் என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!