நாட்டில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்த கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை வழமைக்கு திரும்பியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாரத்தின் வேலை நாட்களில் 4 மணி நேரத்திற்குள் நெரிசல் இல்லாமல் கடவுச்சீட்டுகளை பெறுவது இப்போது சாத்தியமாகும் என திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பதிராஜா தெரிவித்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் 09 ஒரு நாள் சேவை கவுண்டர்கள் தற்போது முழு திறனுடன் இயங்கி வருகின்றன.
இதில் 08 ஒரு நாள் கவுண்டர்கள் மற்றும் முன்னுரிமை கவுண்டர் ஆகியவை அடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை பெறுவதற்கு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கவுண்டர்கள் திறந்திருக்கும். காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடவுச்சீட்டை பெறுவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இரவு முதல் பகல் வரை வரிசையில் காத்திருந்து நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நாள் சேவையின் கீழ் தினமும் சுமார் 2000 கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
பிற்பகல் 2.00 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேரம் இருப்பதால் காலையில் திணைக்கள வளாகத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை.
மேலும், மாத்தறை, வவுனியா, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய இடங்களில் உள்ள ஒவ்வொரு பிராந்திய அலுவலகமும் ஒரு நாள் சேவையின் கீழ் ஒரு நாளைக்கு 250 கடவுச்சீட்டுகளையும் வழக்கமான சேவையின் கீழ் 150 கடவுச்சீட்டுகளையும் வழங்குவதால், அருகிலுள்ள பிராந்திய அலுவலகத்திற்கு சென்று நேரத்தை மீதப்படுத்துமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.