4-வது ஆண்டாக வேகமாக வளர்கிறது இந்திய பொருளாதாரம்: நிர்மலா சீதாராமன் பெருமிதம் | Indian economy growing rapidly for 4th year: Nirmala Sitharaman

தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்தியா வளர்ச்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது, தொடர்ந்து நான்காவது ஆண்டாக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. இதில் சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நமது உற்பத்தித் திறன், நமது சேவைத் திறன் அனைத்தும் அப்படியே இருப்பதை இவை உறுதி செய்துள்ளன. கரோனா பெருந்தொற்று காலத்திலும் அதற்குப் பிறகும் கூட விவசாயம் நம்மை தாங்கி நிற்கிறது.

ஜனவரி-மார்ச் காலாண்டில், தொழில்துறையில் போதுமான முதலீடு இல்லை, அதன் திறன்கள் அதிகரிக்கவில்லை என்ற கருத்துக்கள் இருந்தன. பொருளாதாரத்தில் அதன் தாக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

ஆனால் இந்திய தொழில்துறையில் 2024-25-ம் ஆண்டின் 4-ம் காலாண்டில் உற்பத்தி நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக இருந்தன. நான்காம் காலாண்டில் மட்டும் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருந்தது. இதன் விளைவாக, 2024-25 முழு நிதியாண்டுக்கும் (ஏப்ரல்-மார்ச்), உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருந்தது.

ஒழுங்குமுறை சட்டங்களால் ஏற்படும் சிக்கல்களை களைய அரசு ஒவ்வொரு ஆண்டும் பாடுபட்டு வருகிறது. தொழில்துறைக்கு தடையாக இருப்பவற்றை நீக்கவும் அத்தடைகளை எளிதாக்கவும் பரிந்துரைகளை அளிக்கலாம்.

நமது மக்கள் உலகம் முழுவதும் சென்று பல்வேறு துறைகளில் தலைமைத்துவ அளவில் பணியாற்றி வரும்போது. ‘இந்தியாவால் சாதிக்க முடியுமா, அடைய முடியுமா? என்று நம் மனதில் எழும் சந்தேகத்திலிருந்து நாம் அனைவரும் வெளியேற வேண்டிய நேரம் இது. ஆம், நம்மால் சாதிக்க முடியும். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இலக்கை அடைவதற்கு, ஊழல் என்ற தீமையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!