0
புதுடெல்லி: டெல்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 66 வங்கதேச மக்களை நாடுகடத்த காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லியில் பல ஆண்டுகளாக முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகத் தங்கிவந்த 66 வங்கதேசக் குடிமக்களை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. வடமேற்கு டெல்லிப் பகுதியில் வசித்து வந்த இவர்கள், விசா மற்றும் குடியேற்ற விதிகளை மீறி, சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்து தங்கியிருந்தது கண்டறியப்பட்டது.
இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்துடன் இணைந்து டெல்லி காவல்துறை அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. தற்போது, அவர்களை மீண்டும் வங்கதேசத்திற்கு நாடு கடத்துவதற்கான நடைமுறைகளை இறுதி செய்து வருவதாகவும், அனைத்து சட்ட விதிமுறைகளும் முடிந்தவுடன் அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.